குன்னூரில் பரபரப்பு.. சிறை கம்பிகளை உடைத்து தப்பி ஓடிய 3 கைதிகள்.. விரட்டி பிடித்து மீண்டும் கைது
சிறையில் இருந்து தப்பிய திருடர்களை போலீசார் விரட்டி பிடித்தனர்.
குன்னூர்: குன்னூரில் சிறையில் இருந்து தப்பிய திருடர்களை, சினிமா பாணியில் விரட்டி பிடித்து காவல்துறை அவர்களை மீண்டும் கைது செய்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வண்டிச்சோலை என்ற பகுதி உள்ளது. இங்கு உத்தமபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் 22, குமரன் 23, குன்னூர் புருக்லேன்ட்ஸ் பகுதியை சேர்ந்த அரவிந்த் 22 ஆகிய 3 பேர் இந்த பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.
அவர்கள் தங்கியிருந்த வீட்டின் அருகிலேயே ஒரு தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த ஓட்டலில் காலை 4 மணிக்கு உடைத்து பணத்தை எடுத்து கொண்டு மீண்டும் தங்களது வீட்டில் வந்து ஒன்றுமே நடக்காதது போல் இயல்பாக இருந்து கொண்டனர்.
ஆனால், ஓட்டலின் உரிமையாளர் தாஜிதீன், தன் பணத்தை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை மேற்கோண்ட போலீசார், மேற்கண்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து கடந்த 4-ஆம் கைது செய்து தேதி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இன்று மதியம் சிறை காவலர்கள் உணவு இடைவேளையின்போது சாப்பிட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தை பயன்படுத்தி கொண்ட 3 கைதிகளும், சிறை அறையின் ஜன்னல் கம்பியை உடைத்து வெளியேறினர். மதியம் 1.30 மணியளவில் சுவர் தாண்டி தப்பி ஓட ஆரம்பித்தனர்.
இதனை கண்ட போலீசார் அவர்களை துரத்த ஆரம்பித்தனர். தப்பியோடிய கைதிகள், மவுண்டன் ஹோம் என்ற தனியார் பள்ளியின் வளாகத்திலிருந்த ஒரு புதரில் மறைந்து கொண்டனர். ஆனாலும் அவர்களை மடக்கி பிடித்து மீண்டும் கைது செய்து போலீசார் சிறையிலடைத்தனர். 1,30 மணியிலிருந்து 3.30 மணி வரை என 2 மணி நேரம் போலீசாருக்கு டிமிக்கு கொடுத்து ஓடிக்கொண்டே இருந்த குற்றவாளிகள் மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.