முன்விரோதம் காரணமாக கைதிகள் மோதல்: 3 பேர் வேலூரிலிருந்து புழல் சிறைக்கு மாற்றம்
வேலூர்: வேலூர் சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 3 கைதிகள் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (37) என்பவர், குண்டர் சட்டத்தில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே பிரிவில் சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கைதிகள் நாகூர்மீரான்(23), அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன்(27), பூந்தமல்லியை சேர்ந்த கல்லறை சதீஷ்(28) ஆகியோர் அடைக்கபட்டிருந்தனர். இவர்களுக்குள் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று காலை தனது பிளாக்கில் இருந்து வெளியே வந்த தட்சிணாமூர்த்தியை நாகூர்மீரான் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சிக்கி தட்சிணாமூர்த்தி பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக சிறை காவலர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இத்தாக்குதல் தொடர்பாக பாகாயம் போலீசில் புகார் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போலீசார் தட்சிணாமூர்த்தியை தாக்கிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் நாகூர் மீரானின் உறவினர் ஒருவரை தட்சிணாமூர்த்தி வெட்டியதற்கு பழி வாக்கவே இத்தாக்குதலை அவர்கள் நடத்தியது தெரிய வந்தது.
இதனைடுத்து, நாகூர் மீரான், ராதாகிருஷ்ணன், சதீஷ் 3 பேரும் சென்னை புழல் ஜெயிலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்..