பசுபதி பாண்டியன் ஆதரவு வக்கீலை கொல்ல முயன்ற ராக்கெட் ராஜா கூட்டாளிகள் 3 பேர் கைது
நெல்லை: உயர் நீதிமன்ற வழக்கறிஞருக்குக் கொலை மிரட்டல் விடுத்த புகாரில், பிரபல ரவுடி, ராக்கெட் ராஜாவின் கூட்டாளிகள் மூன்று பேரை சென்னை மாநகர காவல்துறையினர் துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.
மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜ்குமார். இவர் மறைந்த பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் ஆவர். கடந்த 27 ம் தேதி சென்னை, அண்ணாநகர் காவல் நிலையத்தில், புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை சென்னை தனிப்படை போலீஸ் விசாரித்தது. விசாரணையில் ராஜ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது, பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் கூட்டாளிகள் என்று தெரியவந்தது.
இதையடுத்து ராக்கெட் ராஜாவின் கூட்டாளிகளான ராஜபாளையம் அருகே உள்ள முத்துசுப்பையாபுரத்தை சேர்ந்த சண்முகசுந்தரம், சாத்தான்குளம் அறுகேயுள்ள பேய்குளத்தை சேர்ந்த அந்தோணி யாகப்பன், நெல்லை தாழையூத்து பிரவீன் ராஜ் ஆகியோரை சுற்றி வளைத்தனர். அவர்களைச் சென்னைக்கு அழைத்து வந்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். கைதானவர்களிடமிருந்து, நாட்டு துப்பாக்கிகள், பட்டா கத்தி, அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியை சேர்ந்தவர் வக்கீல் ராஜ்குமார். தமிழர் விடுதலை களம் நிறுவனரான இவர் சென்னை அண்ணாநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மதுரை உயர் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு சந்தேகத்திற்கு கிடமாக மூன்று பேர் நோட்டமிட்டு வெகு நேரமாக நின்றிருந்தனர்.
இதை பார்த்த ராஜ்குமாரின் மனைவி சங்கீதா அவர்களிடம் காரணம் கேட்டபோது உன் கணவரை கொல்லாமல் விடமாட்டோம் என அவர்கள் எச்சரித்துள்ளனர். இதை அவர் தனது கணவரிடம் தெரிவிக்கவே அவர் சென்னை கமிஷனரிடம் விபரத்த தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் தனிப்படையினர் தீவிரமாக தேடி சந்தேக நபர்கள் மூன்று பேரையும் சென்னையில் வைத்து மடக்கி பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடு்க்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தூத்துக்குடி அலங்காரத்தட்டை சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளராக வக்கீல் ராஜ்குமார் செயல்பட்டு வந்தார். பசுபதி பாண்டியனுக்கும், தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையாருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வந்தது. இதில் இருதரப்பிலும் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
சுபாஷ் பண்ணையாரின் கூட்டாளி ராக்கெட் ராஜா. இவர் பிரபல ரவுடி. இவருக்கும் வழக்கறிஞர் ராஜ்குமாருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இதில் ராஜ்குமாரைக் கொலை செய்ய இந்த கும்பல் முயற்சி செய்துள்ளது. இதனால் மதுரையிலிருந்த ராஜ்குமார், சென்னையில் பதுங்கியிருந்தார். அந்த இடத்தையும் கண்டறிந்த கும்பல், அவரைக் கொலை செய்ய முயற்சித்துள்ளது. அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதனால், அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து நெல்லைக்கு திரும்பி சென்று விட்டனர். இது தொடர்பாக ராஜ்குமார் கொடுத்த புகாரில், ராக்கெட் ராஜாவின் கூட்டாளிகள் மூன்று பேரை பிடித்துள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.