சென்னையில் ஆசிரியரைத் தாக்கிய தொழிலதிபர் அருளானந்தத்தைப் பிடிக்க 3 தனிப்படைகள்
சென்னை: சென்னையில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மகனை அடித்ததால் பள்ளிக்குள் புகுந்து அவ்வாசிரியரைத் தாக்கிய தொழிலதிபரைக் கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 8 பேர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி 4 ஆவது குறுக்கு தெருவில் லயோலா மெட்ரிக்குலேசன் பள்ளி உள்ளது. இங்கு அர்னால்டு என்ற மாணவர் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை அருளானந்தம் "ரிச் இந்தியா" என்ற பெயரில் மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் உடற்பயிற்சி வகுப்பின் போது உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர்ராஜ் மாணவர்களை விசில் அடித்து அழைத்தார். அப்போது மாணவர் அர்னால்டு பதிலுக்கு விசில் அடித்து குறும்பில் ஈடுபட்டார்.
இதனால் ஆசிரியர் பாஸ்கர் மாணவர் அர்னால்டை தலையில் கொட்டி கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அர்னால்டு செல்போன் மூலம் தனது தந்தைக்கு தகவல் கொடுத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அருளானந்தம் தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை அந்த பள்ளிக்கு அனுப்பி வைத்தார். சுமார் 35 ஊழியர்கள் பள்ளிக்குள் புகுந்து உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர் ராஜூயை கொடூரமாக தாக்கினார்கள்.
இதனால் அவர் மயங்கி விழுந்தார். தாக்குதல் நடத்தியவர்கள் பள்ளியின் நுழைவு வாயில் கதவையும் பூட்டினார்கள். இதனால் மற்ற மாணவர்கள் வெளியில் வரமுடியாமல் தவித்தனர். மாலையில் மாணவர்களை கூப்பிட சென்ற பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியே நின்றபடி தவித்தனர்.
கிட்டதட்ட 1 மணி நேரத்திற்கும் மேல் தாக்குதல் நடத்திய அந்த கும்பல் அதன் பிறகே பள்ளியை விட்டு வெளியே சென்றனர். பலத்த காயம் அடைந்த ஆசிரியர் பாஸ்கர்ராஜ் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதே போல் ஆசிரியர் தாக்கியதால் காயம் அடைந்த மாணவர் அர்னால்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் சார்பில் கோடம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. மாணவர் அர்னால்டு தரப்பிலும் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் பள்ளியில் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் காட்டுத்தீ போல பரவியதால் இதர ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் நேற்று முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போலீசார் தொழில் அதிபர் அருளானந்தம் மற்றும் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சம்பவம் தொடர்பாக முதலில் 17 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் தொழில் அதிபர் அருளானந்தத்தை கைது செய்ய கோரி நேற்று காலை 9 மணியளவில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனே போலீசார் விரைந்து சென்று சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அருளானந்தம் தலைமறைவாகி விட்டதாகவும் அவரை கைது செய்வதாகவும் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதற்கிடையே கமிஷனர் ஜார்ஜ் மற்றும் கூடுதல் கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் பள்ளிக்கு விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். ஆசிரியரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் பள்ளி யில் தாக்குதல் நடத்தியது தொடர்பாக நேற்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் நேற்று இரவில் ரிச் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த சந்திரசேகர், கிருஷ்ண மூர்த்தி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழில் அதிபர் அருளானந்தம் மற்றும் 8 பேரை தனிப்படையினர் தேடி வருகிறார்கள். இந்த நிலையில் அருளானந்தம் சென்னையில் இருந்து தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் தேடப்பட்டு வரும் தொழில் அதிபர் அருளானந்தம் ஏற்கனவே காந்த படுக்கை மோசடியில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.