சென்னை: மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு
சென்னை புது வண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடியில் இருந்து பெசன்ட் நகர் நோக்கி இன்று காலை 8.30 மணிக்கு மாநகர பேருந்து 6டி சென்றது. கல்லூரி மாணவர்கள் உள்பட 40க்கு மேற்பட்டவர்கள் பயணம் செய்தனர். இந்த பேருந்து, வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள பாண்டியன் தியேட்டர் நிறுத்தத்தில் நின்றது.
அப்போது மறைவிடத்தில் நின்றிருந்த 10க்கு மேற்பட்ட இளைஞர்கள் ஓடி வந்து பேருந்தில் ஏறினர். அவர்கள் அனைவரும் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டை, கத்தி, அரிவாள்களை எடுத்து பேருந்துக்குள் இருந்த சில மாணவர்களை வெட்ட முயன்றனர். இதை கண்டதும் பேருந்துக்குள் இருந்த மாணவர்கள் தப்பிக்க முயன்றனர். ஆனால், அவர்களை தப்பிக்க விடாமல் அந்த கும்பல் சுற்றி வளைத்து சீட்டிலேயே வைத்து சரமாரியாக வெட்டியது.
பயணிகள் பீதி
இதனால், பயணிகள் பீதியில் அலறினர். பேருந்தில் இருந்து குதித்து சில மாணவர்கள் தப்பியோடினர். அவர்களையும் கும்பல் விரட்டிச்சென்று சரமாரியாக வெட்டியது. இதை பார்த்ததும் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் பேருந்தினை விட்டு விட்டு ஓடிவிட்டனர். பயணிகளும் அலறியபடி படிக்கட்டு, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு குதித்தனர். இதில் தவறி விழுந்ததில் சிலர் காயம் அடைந்தனர்.
கும்பல் போட்ட சத்தமும், மக்கள் பீதியில் அலறியதும் அந்த பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. பைக், கார்களில் சென்றவர்கள், பயத்தில் தாறுமாறாக வண்டிகளை ஓட்டினர். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் வண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். போலீசாரை பார்த்ததும் தாக்குதல் நடத்திய கும்பல், பேருந்தில் இருந்து இறங்கி ஓடிவிட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை
மர்ம கும்பல் தாக்கியதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மணலியை சேர்ந்த மாணவர்கள் ராஜா (22), அத்திப்பட்டு சரத்குமார் (19), மீஞ்சூர் நாகராஜ் (22) ஆகியோர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உருட்டுக்கட்டை தாக்குதலில் காயம் அடைந்த பயணிகள் தண்டையார்பேட்டையை சேர்ந்த கவுரி (60), செந்தில்குமார் (42) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாநிலக்கல்லூரி
காயமடைந்த மாணவர்கள் மாநிலக் கல்லூரியில் படிப்பவர்கள் என தெரிய வந்துள்ளது.சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், பஸ்சில் சரமாரியாக தாக்குதல் நடத்திய கும்பலை பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பழிக்குப் பழி
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, மின்ட் பஸ் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, தாக்குதலில் ஈடுபட்டது பச்சையப்பன் கல்லூரி மாணவர்களா என்று போலீசார் விசாரிக்கின்றனர்.
சென்னையில் 3 நாள் கலெக்டர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டை நேற்று தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், ‘தமிழகத்தில் சட்டம்&ஒழுங்கு சிறப்பாக உள்ளது' என்று கூறியிருந்தார். இந்நிலையில், தலைநகரில் பட்டப்பகலில் இந்த சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது