சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் கொலை- புதுக்கோட்டை கோர்ட்டில் 3 பேர் சரண்
புதுக்கோட்டை: அகில இந்திய நாடார் பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையாருக்குச் சொந்தமான தோட்டத்தில் நிகழ்ந்த இரட்டைக் கொலை தொடர்பாக 3 பேர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பழையகாயல் ரட்சனியபுரம் பகுதியில் அகில இந்திய நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் சுபாஷ் பண்ணையாரின் ஆதரவாளர்கள் ஆறுமுகச்சாமி (40), கண்ணன் (48) ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக 7 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், நெல்லை மாவட்டம், தச்சநல்லூரைச் சேர்ந்த முருகன் மகன் கண்ணன் (36), மலையரசன் மகன் மணி (எ) மணிகண்டன் (28), முறப்பநாடு அருகே உள்ள படுகையூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முருகன் (24) ஆகிய 3பேர் புதுக்கோட்டை ஜேஎம் 2 நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் சரணடைந்தனர்.