தூத்துக்குடி அனல் மின் நிலையத்தின் 5 யூனிட்களில் 3 யூனிட்கள் முடக்கம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்கள் மூலம் 1050 மெகா வாட் மின் உற்பத்தி நடந்து வந்தது. ஆனால் முதல் 3 யூனிட்களும் நிர்ணயிக்கப்பட்ட ஆயுட்காலத்தை விட 25 ஆண்டுகள் கூடுதலாக இயங்கி வருகின்றன.
தற்போது இந்த 3 யூனிட்களிலும் அடிக்கடி பழுது ஏற்படுவதும், பின்னர் அவை சீரமைக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. இது கடந்த ஒரு வார காலத்திற்குள் மட்டும் 3 முறை பழுதடைந்து விட்டது.
இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் 1வது யூனிட்டில் திடீரென பழுது ஏற்பட்டது. அதிகாலை 4 மணி அளவில் 3வது யூனிட்டும், 6 மணி அளவில் 4வது யூனிட்டும் அடிக்கடி பழுதாகின. இதனால் பெருமளவில் மின் உற்பத்தி முடங்கியது.
5 யூனிட்டுகளில் 3 யூனிட்டுகள் முடங்கியதால் மொத்தம் 630 மெகா வாட் மின் உற்பத்தி முடங்கியது. இதற்கு முன் இதுபோல் இந்த அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டுகள் ஓரே நேரத்தில் முடங்கியது இல்லை. இதனால் தமிழகத்தில் மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
3 யூனிட்டுகளையும் பழுது பார்க்கும் பணியில் அனல் மின் நிலைய ஊழியர்களும், அதிகாரிகளும் தீவிரமாக பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பருவமழை பெய்து வருவதால் மின் நுகர்வு வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் வெயில் தலை காட்டதுவங்கிவிட்டால் மின் நுகர்வு அதிகரிக்கும். அப்போது மின் தடை ஏற்படும். அதற்குள் நிலைமை சீராகி விட்டால் மின்தடை ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
காற்றாலையை பொறுத்தவரை குறைந்த அளவில் மின் உற்பத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.