நடிகை சிந்துவை மிரட்டிய கந்துவட்டி கும்பலை சேர்ந்த 3 பெண்கள் கைது
சென்னை விருகம்பாக்கம் ஓட்டை பிள்ளையார் கோயில் தெருவில் வசிப்பவர் நடிகை சிந்து (35). இவர் டிவி தொடரில் நடித்து வருகிறார் அங்காடி தெரு, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 6ம் தேதி தூக்க மாத்திரை சாப்பிட்டு சிந்து தற்கொலைக்கு முயன்றார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.
மருத்துவமனையில் இருந்து நேரடியாக கடந்த 10ம் தேதி எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தார். அதில், சினிமா தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளேன். பணம் தேவைப்பட்டதால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புரசைவாக்கம் தாணா தெருவில் உள்ள கந்து வட்டிக்கு பணம் தரும் சாந்தி, அவரது தங்கைகள் சுகந்தி, அமுலு, வசந்தி, ஈஸ்வரி ஆகியோரிடம் 20 சதவீதம் ஸ்பீடு வட்டிக்கு ரூ.4.5 லட்சம் கடன் வாங்கினேன்.
அதற்கு மாதம் ரூ.90 ஆயிரம் வட்டி கட்டி வந்தேன். இதுவரை வட்டி மட்டும் ரூ.3.5 லட்சம் கட்டியுள்ளேன். ஓரிரு மாதங்கள் வட்டி கட்ட முடியவில்லை. இதனால், 5 பேரும் அடியாட்களுடன் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து அசிங்கமாக பேசி ஆசிட் வீசி கொன்று விடுவோம் என்று மிரட்டுகின்றனர். இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தேன். அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிந்து கூறியிருந்தார்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்படி வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பெண்களை தேடி வந்தனர்.
புரசைவாக்கத்தில் உள்ள அவர்களது வீட்டுக்கு நேற்றிரவு போலீசார் சென்றனர். போலீசாரை கண்டதும் சாந்தி, அமுலு, வசந்தி, ஈஸ்வரி, சுகந்தி ஆகியோர் தப்பி ஓடினர். போலீசார் துரத்தி சென்று 3 பேரை மடக்கினர். தப்பி ஓடிய சுகந்தி, வசந்தியை தேடி வருகின்றனர்.