குளிர்பானம் என்று நினைத்து மண்ணெண்ணெய்யை குடித்த 3 வயது சிறுவன் பலி
திருவாரூர்: நன்னிலம் அருகே குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய்யை குடித்த 3 வயது சிறுவன் பலியானார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே இருக்கும் அச்சுதமங்கலம் மெயின்ரோட்டில் வசித்து வருபவர் கண்ணன் ஆசாரி. அவருக்கு 3 வயதில் கமலேஷ் என்ற மகன் இருந்தார். கமலேஷ் வீட்டில் உள்ள சமையல் அறையில் விளையாடியுள்ளார். அப்போது அங்கு ஒரு பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை அவர் குளிர்பானம் என தவறான புரிந்து கொண்டார்.
இதையடுத்து சிறுவன் மண்ணெண்ணெய்யை எடுத்து குடித்தார். அதன் பிறகு வாந்தி எடுத்து அழுத சிறுவனை அவரது பெற்றோர் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளித்த பிறகு சிறுவன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
திருவாரூர் மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சிறுவன் ஒருவர் மண்ணெண்ணெய்யை குடித்து பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.