பட்டப் பகலில் துணிகரம்.. சர்ச்சில் குழந்தை கடத்தல்.. சேலைக்குள் மறைத்து கடத்திய பெண்!
3 வயது குழந்தையை பெண் ஒருவர் கடத்தி உள்ளார்.
Recommended Video
சென்னை: பல்லாவரம் அருகே 3 வயது பெண் குழந்தையை கடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குழந்தைகள் கடத்தல்களும், குழந்தைகளின் கொடூர மரணங்களும் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. நேற்று வேளச்சேரியில் உமா என்ற பெண் 2 மாத குழந்தையை ஏரியில் வீசி கொன்றார். தமிழ்நாடே இந்த சோகத்தில் மூழ்கி இருக்கிறது. இந்நிலையில் ஒரு பெண் குழந்தையை பட்டப்பகலில் கடத்தி சென்றிருக்கிறார்கள். அதுவும் ஒரு சர்ச்-க்குள் நுழைந்து.
பல்லாவரம் சர்ச்
குரோம்பேட்டையை சேர்ந்தவர்கள் ஆண்டனி சார்லஸ் - மீரா தம்பதி. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். அவள் பெயர் பெர்லின் பிரின்சி. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், பல்லாவரத்தில் உள்ள நியூ லைப் என்ற சர்ச்-க்கு குழந்தையை தூக்கிக் கொண்டு தம்பதி வந்தனர். ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த சர்ச்சுக்கு இவர்கள் வருவது வழக்கமான ஒன்றுதான்.
விளையாடிய குழந்தை
நேற்றும் அப்படி வரும்போது சர்ச்சுக்குள் தம்பதி வழிபாட்டில் இருந்தனர். அப்போது குழந்தை சர்ச் வெளியே விளையாடி கொண்டிருந்தது. வழிபாடு முடிந்தபிறகு பெற்றோர் குழந்தையை தேடினால் எங்கேயுமே காணோம். இதனால் பதட்டமும், அதிர்ச்சியும் அடைந்த பெற்றோர் பள்ளிகாரணை போலீசில் புகார் அளித்தனர்.
பெண் கடத்தும் காட்சி
அதனடிப்படையில் போலீசார் சர்ச்சுக்கு விரைந்து வந்தனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, குழந்தையை பெண் ஒருவர் தோளில் தூக்கிக்கொண்டு தனது புடவையால் மறைத்து செல்லும் காட்சியானது பதிவாகி இருந்தது. அந்த பெண் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.
குழந்தையின் புகைப்படம்
இதனால் போலீசார் குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளங்கள், நண்பர்கள், உறவினர்கள், அனைத்து ரயில் நிலையங்களிலும் அளித்துள்ளார்கள். அதோடு காணாமல் போன குழந்தையையும் தேடி வருகிறார்கள்.