நகைக்காக 3 வயது சிறுமி கடத்திக் கொலை... பக்கத்துவீட்டுப் பெண் கைது
3 வயது சிறுமி நகைக்காக கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பக்கத்துவீட்டு பெண் ரேவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
எண்ணூர்: எண்ணூர் சுனாமிக் குடியிருப்பைச் சேர்ந்த 3 வயது சிறுமி ரித்திகா நகைக்காக கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பெண் ஒருவர் கை செய்யப்பட்டார்.
எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் முத்து என்பவரின் மகள் ரித்திகா. 3 வயதான ரித்திகா சனிக்கிழமை திடீரென்று காணாமல் போனார். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தை நேற்று குப்பையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
எண்ணூரில் 3 வயது குழந்தை ரித்திகா கொலை வழக்கில் பக்கத்துவீட்டில் வசித்து வந்த ரேவதி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விசாரித்த போது, நகைக்காக குழந்தையை கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குழந்தை ரித்திகாவிடம் இருந்து பறிக்கப்பட்ட நகைகள் அனைத்தும் ரேவதியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
3 வயது குழந்தை நகைக்காக கொலைச் செய்யப்பட்டதை அறிந்த எண்ணூர் பகுதி மக்கள் ஒன்று திரண்டு கொலை செய்தவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலின் போது போலீசாருக்கும் அப்பகுதி பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் எண்ணூர் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் சிறுமி கொலை குறித்து தொடர்ந்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.