பால்வாடி சென்ற 3 வயது சிறுமிக்கு 65 வயது முதியவர் பாலியல் தொல்லை-திண்டுக்கல் 'ஷாக்'
திண்டுக்கல் அருகே 3 வயது சிறுமிக்கு 65 வயது முதியவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பால்வாடி சென்ற 3 வயது சிறுமிக்கு 65 வயது முதியவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் மீது வழக்கு பதியக் கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு மீனாட்சிநாயக்கம்பட்டியில் நேற்று 3 வயது சிறுமி பால்வாடிக்கு சென்றுள்ளார். மாலை வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர் சிறுமியைத் தேடி வந்துள்ளனர்.
அப்போது ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி காவலாளி மாரியப்பனின் அறையில் இருந்து சிறுமியின் அழுகுரல் கேட்டுள்ளது. ரத்தம் சொட்ட சொட்ட அழுதுகொண்டு நின்ற சிறுமியை மீட்ட பெற்றோர் என்ன நடந்தது என்று தெரியாமல் திகைத்துப் போயுள்ளனர்.
கண்ணீருடன் கூறிய சிறுமி
வீட்டிற்கு சென்று சிறுமியிடம் கேட்ட போது முதியவர் அறையில் அடைத்து பாலியல் தொல்லை செய்ததாக கண்ணீருடன் தெரிவித்திருக்கிறது அந்த பிஞ்சுக் குழந்தை. மேலும் சிறுமியின் உடலில் சில பகுதிகளில் காயம் இருந்ததால் பெற்றோர் அவளை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மாரியப்பன் அறையில் சிதறிக்கிடந்த ரத்தம்
இதனைத் தொடர்ந்து 65 வயது முதியவர் மாரியப்பன் அறைக்கு சென்று பார்த்த போது அந்த அறையின் பல இடங்களில் ரத்தம் உறைந்திருந்ததைக் கண்டு உறவினர்களும் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து முதியவரை அவர்கள் சரமாரியாக தாக்கி அறையில் அடைத்து வைத்து போலீசாரிடம் தகவல் கொடுத்துள்ளனர்.
முதியவருக்கு சரமாரி அடி
பொதுமக்கள் அடித்ததில் முதியவருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயமறிந்த ஊர் மக்கள் முதியவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல் - பழனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
உறவினர்கள் மறியல்
உறவினர்களின் திடீர் மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் சமாதான பேச்சுவார்தை நடத்தினர், முதியவர் மீது நிச்சயம் வழக்கு பதிவு செய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
அதிர வைத்த சம்பவம்
தள்ளாத வயது முதியவரான 65 வயது மாரியப்பன் பிஞ்சுக் குழந்தையான 3 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது அந்த கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெண் குழந்தைகளுக்கு எங்குமே யாராலுமே பாதுகாப்பு இல்லாத சூழலுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தமிழகம் மாறி வருகிறதோ என்ற அச்சத்தையே இந்த சம்பவம் நினைவுபடுத்துகிறது.