ஜெயலலிதா இல்லாத 3 ஆண்டுகள்... கட்சியும், ஆட்சியும் எப்படி இருக்கிறது?
சென்னை: ஜெயலலிதா மறைந்து இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில் அவர் விட்டுச் சென்ற கட்சியும், ஆட்சியும் எப்படி இருக்கிறது என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா கைக்கு சென்று, இப்போது ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.ஆகிய இருவர் கைகளிலும் உள்ளது.
ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை ஒன் மேன் ஆர்மியாக இருந்த இயக்கம் இன்று கூட்டுத்தலைமை என்கிற பெயரில் இயங்கி வருகிறது.
அஞ்சாத குணம்
ஜெயலலிதாவை பொறுத்தவரை வெற்றி தோல்விகளை காட்டிலும் கட்டுக்கோப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவராக இருந்தார். ராணுவத்தை போன்று கட்சியை வழிநடத்தி வந்த அவர், எந்த தனிமனிதர்களுக்கும் அஞ்சாத போர்க்குணம் கொண்டவராக தனது இறுதி மூச்சு வரை திகழ்ந்தார். பல நேரங்களில் டெல்லியையே போயஸ் கார்டனுக்கு தேடி வரவைத்த பெருமையும், வரலாறும் ஜெயலலிதாவுக்கு உண்டு.
பேரதிர்ச்சி
2016 டிசம்பர் 5-ம் தேதி நிகழ்ந்த ஜெயலலிதாவின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. யூகங்களை உடைத்து ஜெ. மீண்டு வருவார் என எண்ணிய தமிழக மக்களுக்கு, அவர் மீளாத்துயில் கொண்டுவிட்டார் என்ற செய்தி பெருஞ்சோகத்தை தந்தது. குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்ட நிலைக்கு சென்றனர் அதிமுக தொண்டர்கள்.
சாமர்த்தியம்
ஜெயலலிதா இல்லாத இந்த மூன்று ஆண்டுகளும் ஆட்சியை மிக சாமர்த்தியமாக நடத்தி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ். பிரிவு, சசிகலா சிறை என அடுத்தடுத்து பல்வேறு இக்கட்டுகள் ஏற்பட்ட போதும் ஜெ.விட்டுச் சென்ற ஆட்சியை கெட்டிக்காரத்தனமாக பாதுகாத்த பெருமை இ.பி.எஸ்.க்கு உண்டு. இதுவரை இல்லாத அளவுக்கு அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்ற போதும் அதை சாதுர்யமாக சமாளித்து ஆட்சியை தொடர்கிறார்.
ஓ.கே., ஓ.கே
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீது வைக்கப்படும் குறைகள் என்றால், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவர் எதிர்த்த அனைத்து திட்டங்களுக்கும் இப்போது ஓ.கே.சொன்னது தான். உதய் திட்டம், உணவு பாதுகாப்புத் திட்டம் நீட் தேர்வு தொடங்கி புதிய கல்விக் கொள்கை வரை ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தமிழகத்தில் அதை பற்றி பேசுவதற்கே இடமில்லாமல் போயிருக்கும். நிச்சயம் அவர் இந்த திட்டங்களை தமிழகத்திற்குள் அனுமதித்து இருக்கமாட்டார். இந்த விவகாரங்கள் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனங்களுக்கு காரணமாகும்.
துணிச்சல்
தமிழகத்துக்கான திட்டங்களை மத்திய அரசிடம் போராடி துணிச்சலுடன் கேட்டுப் பெறுவார் ஜெயலலிதா. இதற்காக தன்னால் முடிந்தவரை டெல்லிக்கு அரசியல் அழுத்தம் தருவார். ஆனால், இன்று தமிழகத்துக்கான திட்டங்களையும், உரிமைகளையும் பெற தமிழக அரசு டெல்லிக்கு அழுத்தம் கொடுக்கிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ராணுவக் கட்டுபாடு
ராணுவக் கட்டுப்பாடுடன் செயல்பட்ட அதிமுகவில் இன்று கட்டுப்பாடு காணாமல் போய்விட்டது. இதற்கு உதாரணமாக ஒற்றைத் தலைமை கோரி மதுரையில் ராஜன் செல்லப்பா அண்மையில் அளித்த பேட்டியை குறிப்பிடலாம். நானும் தலைவர்...நானும் தலைவர் என்பது போல் திரும்பிய திசையெல்லாம் அதிமுகவில் தலைவர்கள் மட்டுமே இன்று காட்சியளிக்கின்றனர்.
சாதுர்யம்
அதிமுகவில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் நிர்வாகிகளும், தொண்டர்களும் அமமுகவிற்கு சென்றிருந்தாலும் கூட, ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஏதோ ஒரு ரூபத்தில் அவர்களுக்கு உதவி செய்து ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ் கட்சியை வலுப்படுத்தி வருகின்றனர். மேலும், சாதுர்யமான நடவடிக்கைகளால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்கின்றனர்.
தனித்துவம்
ஜெயலலிதா இல்லாத கடந்த மூன்றாண்டுகளும், ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி ஒரு சில விவகாரங்களில் சுணக்கம் இருப்பது உண்மை தான். ஆனால் அந்த சுணக்கத்தை போக்குவதும் போக்காமல் இருப்பதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தனித்துவமான செயல்பாடுகளில் தான் அடங்கியுள்ளது.
நினைவஞ்சலி
ஜெயலலிதா மீது ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திருப்பதை யாராலும் மறுக்க இயலாது. இன்றும் தேநீர் கடைகள், முடிதிருத்தகங்களில் அரசியல் தொடர்பான விவாதம் வரும் போது, அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தைகள் ''அந்தம்மா இருந்திருந்தா விட்டிருப்பாரா... '' என்பது தான். அந்தளவு துணிச்சலுடன் காரியம் ஆற்றியவர் ஜெயலலிதா. மேலும், வாட்ஸ் அப் ஸ்டேடஸ், முகநூல் பதிவுகளில் கட்சிக்கு அப்பாற்பட்டு ஜெ.வின் படத்தை வைத்து இன்று நினைவஞ்சலி செலுத்த தமிழக மக்கள் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.