பள்ளி மாணவியிடம் “பாலியல்” தொந்தரவு செய்த மூன்று இளைஞர்கள் கைது
ஈரோடு: ஈரோட்டில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி சுமதி வயது-15, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஞாயிற்றுக்கிழமை மாணவியின் பெற்றோர்கள் வேலைக்குச் சென்று விட்டதால், மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், ராஜா, சீனிவாசன் ஆகிய மூவரும் மாணவியிடம் வீட்டுக்குள் நுழைந்து அவரிடம் தவறாக நடக்க முயன்றதாகத் தெரிகிறது. அப்போது, மாணவியின் தந்தை வந்து விட்டதால் மூவரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து அம் மாணவியின் தந்தை, மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் மூவரும் கைது செய்யப்பட்டனர். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக அம் மாணவி அனுப்பி வைக்கப்பட்டார்.