மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த மூவர் உடல் துண்டாகி பலி - 4 பேர் காயம்
சென்னையில் மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த இளைஞர்கள் தவறி விழுந்த விபத்தில் 3 பேர் உடல் துண்டாகி உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சென்னை: தாம்பரம் - கடற்கரை மார்க்கமாக செல்லும் ரயிலில் காலை நேரத்தில் கூட்டம் அதிகமாகவே காணப்படும். இன்று காலையில் பரங்கிமலையில் ஏறிய இளைஞர்கள் சிலர் மின்சார ரயிலில் படிக்கட்டு அருகே தொங்கியபடி பயணம் செய்தனர். பழவந்தாங்கலை ரயில் நெருங்கும் போது சிலர் தவறி விழுந்து படுகாயமடைந்தனர். இதில் 2 பேர் உடல் துண்டாகி உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மின்சார ரயிலில் தினசரியும் ஏராளமானோர் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். காலை பணிக்கு செல்லும் போதும், மாலையில் பணி முடிந்து திரும்பும் போதும் கூட்டம் அலைமோதும். உயிருக்கு ஆபத்தான நிலையில் படியில் தொங்கியபடியே பயணம் செய்வார்கள்.
இன்று காலையில் பரங்கிமலை அருகே மின்சார ரயில் வந்து கொண்டிருந்த போது சிக்னலை சரிபார்க்க வைத்திருந்த ஏணியில் பயணி ஒருவரின் முதுகில் இருந்த பேக் சிக்கியது. இதில் அவர் கீழே விழுந்தார். இதனையடுத்து அந்த ஏணி திரும்பியதில் அடுத்தடுத்த பெட்டிகளில் தொங்கியபடி பயணம் செய்தவர்கள் கீழே விழுந்தனர்.
இதில் சம்பவ இடத்தில் 2 பேரின் உடல் துண்டானது. ஒருவர் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார். விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் மணி, பிரவீண் சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்தாவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதில் ஒருவர் திருவண்ணாமலையைச் சேர்ந்த மதுசூதனன் என்றும், தாம்பரத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இருவரின் பெயர் தெரியவில்லை.
ஏணிதான் எமனாக மாறி பயணிகளின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். இதே இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தை ரயில்வே ஐஜி ராம சுப்ரமணியன் நேரில் பார்வையிட்டார்.
மின்சார ரயில்களில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பரங்கிமலை - பழவந்தாங்கல் இடையே இன்று காலையில் நிகழ்ந்த விபத்து சக பயணிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.