சேலம் ஆத்தூர் அருகே பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து... 30 மாணவ, மாணவியர் காயம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் காயமடைந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
சேலம்: ஆத்தூர் அருகே தனியார் பள்ளிப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் காயம் அடைந்தனர். இதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆத்தூரை அடுத்த மோட்டூரில் பாரதியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று காலையில் தாண்டவராயபுரம் பகுதியில் மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு பள்ளி நோக்கி, பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது, தாண்டவராயபுரம் அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை திடீரென இழந்த பேருந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் இருந்த பள்ளிக் குழந்தைகள் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதையடுத்து, காயமடைந்த பள்ளி மாணவர்களை அருகிலிருந்தோர் மீட்டு, சிகிச்சைக்காக ஆத்தூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பேருந்து சரியாக பராமரிக்கப்படவில்லை என்பதால் அது கட்டுப்பாட்டை இழந்து விபத்து நேர்ந்துள்ளது என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பேருந்துகள் பராமரிப்புக் குறித்து போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டுவதால், தனியார் பள்ளி பேருந்துகள் சேலம் மாவட்டத்தில் அடிக்கடி விபத்தில் சிக்குவதாகவும் திடுக் புகாரும் எழுந்துள்ளது.
இதனிடையே, பள்ளி பேருந்து விபத்துக்குள்ளான தாண்டவராயபுரம் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதால், சாலையை அகலப்படுத்தக் கோரி, மோட்டூர், தாண்டவராயபுரம் பகுதி மக்கள் ஆத்தூர்- ராசிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.