”நாட்டில் நடக்கும் குற்றங்களில் பதிவாவது 30 சதவீதம் மட்டுமே” ஆர்.கே.ராகவன் தகவல்
சென்னை: நடைபெறும் குற்றங்களில் 30 சதவீத குற்றங்கள் மட்டுமே பதிவாகின்றன என சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கையில் 30 சதவீதம் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன என சி.பி.ஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன் கூறினார்.
"குற்றங்களிலிருந்து மக்களை எவ்வாறு காப்பது" என்ற தலைப்பிலான கலந்துரையாடலை சென்னை திருவல்லிக்கேணி கலாசார அகாதெமியும், கஸ்தூரி ஸ்ரீனிவாசன் நூலகமும் இணைந்து வியாழக்கிழமை நடத்தியது.
இதில் பங்கேற்ற சி.பி.ஐ முன்னாள் இயக்குனர் ஆர்.கே.ராகவன் கூறியபோது, "நாட்டில் நடைபெறும் குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிடுகிறது. இதில் இடம்பெறும் புள்ளி விவரங்கள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
நாட்டில் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கையில் 30 சதவீதம் மட்டுமே பதிவாகின்றன. இந்தியாவில் மட்டும் அல்லாமல், உலகளவிலும் எந்த ஒரு குற்றத்தையும் காவல் நிலையத்தில் பதிவு செய்வது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. குற்ற விவரங்கள் அதிகம் பதிவாவதை அரசியல்வாதிகள் விரும்புவதில்லை.
கடந்த 2012-ஆம் ஆண்டுக்கான குற்றப் புள்ளி விவரங்கள் தேசிய குற்ற ஆவணக் காப்பக இணையதளத்தில் உள்ளன. 2013-ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகலாம்" என்றார் ஆர்.கே.ராகவன்.