ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட சென்னை காசிமேடு மீனவர்கள் 300 பேர் விடுவிப்பு!
சென்னை: ஆந்திராவில் சிறை வைக்கப்பட்டிருந்த சென்னை மீனவர்கள் 300 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 30 விசைப்படகுகளில் சுமார் 300 மீனவர்கள் ஆந்திர கடல்பகுதியை ஒட்டிய பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
தமிழக, ஆந்திர கடல் எல்லையான கிருஷ்ணாம் பட்டினம், மண்ணூர், கிருஷ்ணாபுரம் ஆகிய கடல் பகுதியில் இவர்கள் மீன்பிடிப்பது வழக்கம். அதேபோல் நேற்று மதியம் சென்னை காசிமேடு மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆந்திர மீனவர்கள் சென்னை மீனவர்களை சுற்றிவளைத்தனர்.
எங்கள் கடல் பகுதியில் நீங்கள் மீன்பிடிக்ககூடாது என கூறி காசிமேடு மீனவர்ளை சிறைபிடித்தனர். இதனால் நடுக்கடலிலேயே இரு மாநில மீனவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் காசிமேடு பகுதியை சேர்ந்த 30 விசைபடகுகளையும், அதில் இருந்த 300 மீனவர்களையும் சிறைபிடித்து கரைக்கு அழைத்து வந்தனர். படகுகளை பறிமுதல் செய்தனர். மேலும் மீனவர்கள் கொண்டு சென்ற உணவுகளையும் பறித்தனர். மேலும் அங்குள்ள பகுதியிலேயே சிறைவைத்தனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் காசிமேடு மீன்வளத்துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர் சிவக்குமார் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்றது. இதையடுத்து, 300 மீனவர்களும் இன்று விடுவிக்கப்பட்டனர். நஷ்ட ஈடு கொடுப்பதாக வாக்குறுதி அளித்த பிறகு மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.