மதுரை விமான நிலையத்தில் 31.75 கிலோ தங்கம் சிக்கியது.. 3 பேர் கைது
மதுரை: மதுரை விமான நிலையத்தில் ஒரே சோதனையில் 31.75 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். பறிமுதலான தங்கத்தின் மதிப்பு ரூ. 8.43 கோடியாகும்.
2 சர்வதேச விமானங்களில் மதுரைக்கு வந்த 10 பயணிகளைப் பரிசோதித்தபோது இந்த 3 பேரும் சிக்கினர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்ற 7 பேரிடமும் விசாரணை தொடர்கிறது.
இலங்கையிலிருந்து வந்த மிகின்லங்கா விமானம் மற்றும் துபாயிலிருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் ஆகியவை முழுமையாக சோதனையிடப்பட்டது. அதில் வந்த பயணிகள் அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. அதில் 10 பேர் மீது சந்தேகம் வந்தது. அவர்களைத் தனியாக வைத்து விசாரித்தபோது கடத்தல் தங்கத்தைக் கொண்டு வந்த 3 பேர் சிக்கினர்.
தங்கம் தவிர ஆடைகள், செல்போன்கள், வெளிநாட்டு சிகரெட், மது ஆகியவையும் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தில் ஒரு கிலோ தங்க பார்கள், 100 கிராம் தங்க பிஸ்கட்கள் ஆகியவையும் அடக்கம். சாக்லேட் பேப்பரில் வைத்து இதை சுருட்டிக் கடத்தி வந்திருந்தனர்.