ராமேஸ்வரம் நடுக்கடலில் அடையாள அட்டை இல்லாமல் கடற்படையினரிடம் சிக்கிய 32 மீனவர்கள்
அடையாள அட்டை இல்லாத மீனவர்களை இந்திய கடற்படை சுற்றிவளைத்து பிடித்தது
ராமேஸ்வரம்: நடுக்கடலில் அடையாள அட்டை இல்லாமல் மீன் பிடித்ததாக 32 மீனவர்களை இந்திய கடற்படையினர் அதிரடியாக சுற்றிவளைத்தனர்.
தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் நேற்று முதல் தொடங்கியது. இதையடுத்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ராமேஸ்வர மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இந்நிலையில் இந்திய கடற்படையினர் நடுக்கடலில் ரோந்து மேற்கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் 3 படகுகளில் வந்த மீனவர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது 32 மீனவர்களிடம் அடையாள அட்டை இல்லை என தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை ராமேஸ்வரம் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்ற இந்திய கடற்படையினர், மீன்வளத்துறைக்கு தகவல் அளித்தனர்.
பின்னர் விரைந்து மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். அடையாள அட்டை இல்லாமல் கடலுக்கு செல்லக்கூடாது என்றும் மீறி சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி எச்சரித்தனர். இதன் பின்னர் மீனவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.