ஈரோடு: பியூட்டி பார்லரில் பெண் தூக்குப் போட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த பெண் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
பெருந்துறை ஜீவாநகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் பிரதீபா (வயது 33). இவர் பெருந்துறை பழைய பஸ்நிலையம் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். இவரது கணவர் சிவகுமார் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடன் தொல்லை காரணமாக மனைவியை பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்பட்டது.
அதன்பின்னர் பிரதீபா தனது தாயார் சுகுணாம்பாளுடன் ஜீவாநகர் வீட்டில் வசித்து வந்தார்.
நேற்று காலை பிரதீபா தாயாரிடம் பியூட்டி பார்லருக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாயார் மகளின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் பிரதீபா செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் பியூட்டி பார்லருக்கு சென்று பார்த்தார். அங்கு பியூட்டி பார்லர் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு கிடந்தது. இதையடுத்து பிரதீபாவின் தாயார் பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பிரதீபா மின் விசிறி கொக்கியில் கயிற்றில் தூக்கு போட்டு பிணமாக தொங்கினார். மகளின் உடலை பார்த்து தாயார் கதறி அழுதார்.
பிரதீபா கண் ஆபரேசன் செய்துள்ளார். மேலும் வெகுநாட்களாக இடது காது வலியால் அவதிபட்டு வந்தாராம். இதனால் அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என தாயார் தெரிவித்தார். இருப்பிலும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உண்டா? என பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பியூட்டி பார்லர் உரிமையாளர் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெருந்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.