மழையால் இழந்த சான்றிதழ்கள்... சிறப்பு முகாம்களில் 35,541 பேர் விண்ணப்பம்
சென்னை: சென்னை மாவட்டத்திலுள்ள 10 வட்டங்களில் நடைபெற்ற முகாம்களில் இதுவரை 35,541 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றிக்கான ஓப்புகைச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் உடமைகளுடன் முக்கிய ஆவணங்களை இழந்துள்ளனர். கல்விச் சான்றிதழ் ஆவணங்களின் நகல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை அவர்களுக்கு கட்டணமின்றி வழங்கும் பொருட்டு முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி, நான்கு மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மாவட்டத்திலுள்ள 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கடந்த 14ம்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற சிறப்பு முகாம்களில் 3,572 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. வருவாய்த் துறை தொடர்பாக 117 விண்ணப்பங்களும், பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக 640 விண்ணப்பங்களும், பத்திரப்பதிவுத்துறை தொடர்பாக 173 விண்ணப்பங்களும், போக்குவரத்துத்துறை தொடர்பாக 878 விண்ணப்பங்களும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தொடர்பாக 193 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்கு 1,017 விண்ணப்பங்களும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் துறை தொடர்பாக 193 விண்ணப்பங்களும், பொதுத்துறை வங்கிகள் தொடர்பாக 204 விண்ணப்பங்களும், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்பாக 135 விண்ணப்பங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை தொடர்பாக 14 விண்ணப்பங்களும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தொடர்பாக 8 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
சென்னை மாவட்டத்திலுள்ள 10 வட்டங்களில் 9 நாட்களில் நடைபெற்ற முகாம்களில் இதுவரை 35,541 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றிற்கான ஒப்புகைச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி கூறியுள்ளார்.
மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் இழந்துள்ள நிலம் மற்றும் வீட்டுமனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரிவாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிலம்/ வீட்டு கிரையப் பத்திரம், ஆட்டோ ஓட்டுநர்கள் இழந்துள்ள ஓட்டுநர் உரிமச் சான்று மற்றும் வாகன பதிவுச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை அவர்களுக்கு வழங்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்திலுள்ள 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 14.12.2015 முதல் 28.12.2015 வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இம்முகாம்கள் மூலம் பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று ஒரு வார காலத்திற்குள்ளாக கட்டணமின்றி நகல் ஆவணங்கள் வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.