கரூரில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 35 பேர் காயம்
கரூர் அருகே அரசுப்பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 35 பேர் படுகாயமடைந்தனர்.
கரூர்: கரூர் அருகே மணவாசியில் 2 அரசு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் மோதி ஏற்பட்ட விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் காயமடைந்த 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கரூரை அடுத்த மாயனூரில் கரூர்-திருச்சி நான்கு வழிச் சாலை, இருவழிச்சாலையாக மாறுகிறது. அந்த பகுதியில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை திருப்பூரிலிருந்து அறந்தாங்கி நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், வேளாங்கன்னியில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதின.
இந்த விபத்தில் பேருந்துகளில் பயணம் செய்த 35 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை 18 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் கரூரில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பேருந்து டிரைவர்கள் உள்பட 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் ஆய்வு செய்து, பயணிகளுக்கு ஆறுதல் கூறினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய அவசர சிகிச்சையை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதுகுறித்து, மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.