நாளை முதல் தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை தொடக்கம்
நெல்லை: நாடு முழுவதும் தபால் நிலையங்களில் நாளை முதல் பாஸ்போர்ட் சேவை தொடங்குகிறது.
இந்தியா முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரத்து 979 தபால் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
தபால் துறையின் வருமானத்தை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
செல்போன் வருகையால்
குறிப்பாக செல்போன் வருகைக்கு பின்னர் தபால் துறை பெரும் பாதிப்பை சந்தித்தாலும் அவற்றை ஈடுகட்ட பல புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வருவாயைப் பெருக்க
தபால் துறையின் வருமானத்தை அதிகரிக்க மின் கட்டண வசூல், சோலார் விளக்கு, மற்றும் மினி பிரிட்ஜ், ரயில், விமான டிக்கெட் முன்பதிவு, உடனடி மணியார்டர், செல்போன் மூலம் பண பரிவர்த்தனை போன்ற பல சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இ போஸ்ட் திட்டம்
கம்யூட்டர் வசதி உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இ போஸ்ட் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் புதிய திட்டங்களில் தொடர்ச்சியாக 22ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமை தபால் நிலையங்களிலும் பாஸ்போர்ட் ஆன்லைன் சேவை துவங்கப்பட உள்ளது.
பாஸ்போர்ட் சேவை
29 தலைமை தபால் நிலையங்கள் உள்பட 36க்கும் மேற்பட்ட இடங்களில் இச்சேவை துவங்கப்பட உள்ளது.
நெல்லையில் 3 இடங்களில்
இதுகுறித்து நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் கூறுகையில், நெல்லையைப் பொறுத்தவரை நெல்லை, பாளை, அம்பை ஆகிய தலைமை தபால் நிலையங்களில் நாளை முதல் துவங்கப்பட உள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்
பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்தினை ரூ.10 கொடுத்து பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அதே தலைமை தபால் நிலையத்தில் ரூ.100 செலுத்தி ஆன் லைன் முன்பதிவு செய்யலாம்.
பதிவு செய்தவுடன் செல்லான்
பதிவு செய்தவுடன் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் செல்லான் வழங்கப்படும். அதன் பின்னர் செல்லான் மூலம் எஸ்பிஐ வங்கியில் உரிய கட்டணம் செலுத்திய பின்னர் ஏற்கனவே விண்ணப்பம் பெற்ற தபால் நிலையத்துக்கு சென்று நேர்காணலுக்கான நுழைவு சீட்டை பெற்று கொள்ளலாம்.
வாய்ப்பை பயன்படுத்துங்கள் மக்களே
பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.