ஹைகோர்ட் உத்தரவு எதிரொலி: பொது இடங்களில் புகைபிடித்த 355 பேர் வழக்கு பதிவு
சென்னை: சென்னையில் பொது இடங்களில் புகைபிடித்த 355 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. மேலும் சுகாதாரத்துறை செயலாளர், டி.ஜி.பி திடீர் ஆய்வு செய்யவும் உத்தரவிட்டது.
பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை என்று கூறி சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த சரத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்ததார்.
இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உச்சநீதிமன்றம் வரையறுத்த 8 பொது இடங்களில் புகையிலை விற்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.
கல்வி நிலையங்கள், மருத்துவமனை, ரயில் நிலையங்கள் அருகே புகையிலை விற்றால் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், இவ்விகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை பற்றி வரும் 20ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் பொது இடங்களில் புகைபிடித்த 355 பேர் வழக்கு பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் பொது இடங்களில் புகைபிடித்தோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.