திருவண்ணாமலை: காங். பிரமுகர் வீட்டில் 6 பீரோக்களை உடைத்து 369 சவரன் நகைகள் கொள்ளை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் காங்கிரஸ் பிரமுகர் வீட்டின் பூட்டை உடைத்து 369 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வீட்டில் இருந்த ஒன்றரை கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கமும் கொள்ளை போயுள்ளது. காங்கிரஸ் பிரமுகர் பாபு, தனது மகள் திருமணத்திற்காக சென்னை சென்றிருந்தபோது கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
செய்யாறு பெரியார் தெருவை சேர்ந்தவர் பாபு(52). அரிசி ஆலை, திருமண மண்டபம் வைத்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத்தலைவராகவும் இருக்கிறார்.
இவரது மனைவி ராணி. இவர்களது மகள் பரணிப்பிரியாவுக்கு திங்கட்கிழமை காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதற்காக பாபு உட்பட குடும்பத்தினர் அனைவரும் ஞாயிறு இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டனர்.
இரவு வீட்டின் பாதுகாப்புக்காக காவலாளி ஒருவரை நியமித்துவிட்டு சென்றனர். அந்த காவலாளியும் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக திங்கட்கிழமை காலை சென்னை சென்றுவிட்டார்.
உடைக்கப்பட்ட பீரோக்கள்
இந்நிலையில் திங்கட்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பாபுவின் மனைவி ராணி மற்றும் அவரது சகோதரர் மணி ஆகியோர் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கதவை திறந்து உள்ளே சென்றுபார்த்தபோது அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் பூட்டப்பட்டு இருந்த கதவுகள் திறந்து இருந்தது. அந்த அறைகளில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த ராணி உடனடியாக தனது கணவர் பாபுவுக்கு தகவல் தெரிவித்தார். போலீசுக்கும் போன் மூலம் தகவல் கூறினார்.
உடனடியாக பாபு அங்கு விரைந்து வந்தார். அதே நேரத்தில் தகவல் கிடைத்ததும் போலீசாரும் அங்கே வந்தனர். வீட்டில் சோதனை செய்தபோது 6 பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தது.
ரூ.78 லட்சம் பொருட்கள்
பீரோவை சோதனை செய்து பார்த்தபோது அதில் வைத்திருந்த நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள், ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு பாபுவின் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளனர். கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு ரூ.78 லட்சம் ஆகும்.
369 சவரன் நகைகள்
மணமகளுக்காக செய்து வைத்திருந்த 121 சவரன் நகைகள், பாபுவின் மனைவி ராணிக்கு சொந்தமான 150 சவரன் நகை, மாமியாருக்கு சொந்தமான 70 சவரன் நகை உள்பட மொத்தம் 369 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
வெள்ளிப் பொருட்கள்
இதுபோக ஒன்றரை கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
மர்ம நபர்கள் கைவரிசை
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்ட மர்ம ஆசாமிகள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் மேல் மாடியில் உள்ள ஜன்னல் கம்பிகளை அறுத்து மர்ம ஆசாமிகள் உள்ளே வந்துள்ளது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.