Exclusive: எப்படி குழந்தை பிறக்கும்.. ஒரினச்சேர்க்கை அனுமதிக்கு கிளம்பும் எதிர்ப்புகள்!
ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என்பது தவறான தீர்ப்பு என ஓய்வு பெற்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை: ஓரினச்சேர்க்கை குற்றமாகாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஒருவரின் தனிப்பட்ட உரிமையை மறுப்பது மரணத்திற்கு நிகராகும் என்றும் ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் அளித்தது உச்சநீதிமன்றம். இதனை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என ஓரினச்சேர்க்கையாளர்கள் கொண்டாடி வருகின்றனர். எனினும் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நீதித்துறையை சார்ந்தவர்களே எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
வள்ளிநாயகம் (சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி-ஓய்வு)
இது போன்ற தீர்ப்பினால் சமுதாய சீர்கேடுதான் ஏற்படும். உச்சநீதிமன்றமே சொன்னாலும் இது தவறுதான். கல்யாணம் என்ற பந்தம் ஏற்படுமா? ஆணும் ஆணும் ஒன்றாக இருப்பேன் என்பார்கள், அதேபோல பெண்ணும் பெண்ணும் ஒன்றாக இருப்பேன் என்பார்கள். இதனால் குழந்தைகள் பிறக்குமா? ஒரு மருத்துவ ஆய்வு நடத்தினார்கள், அதன்படி ஆணும் ஆணும் ஒன்று சேர்ந்தால், விந்துக்களின் சக்தி குறைவு என்று அதில் தெரிவித்தார்கள். பிறகு எப்படி குழந்தை பிறக்கும்? இது ஒரு தவறான தீர்ப்புதான்.
நந்தகுமார் (உச்சநீதிமன்ற வழக்கறிஞர்)
நீதிபதிகளின் தீர்ப்பில், இயற்கைக்கு முரணான உடலுறவுகளை கண்டித்து சட்டம் ஏற்கனவே இயற்றப்பட்டது. அதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று வழங்கிய தீர்ப்பில், ஆணுக்கு ஆணோ, பெண்ணுக்கு பெண்ணோ ஒப்புதலுடன் உடலுறவு கொண்டால் அது தவறில்லை என்று உறுதி செய்யப்பட்டுளள்து. இந்த தீர்ப்பின் முக்கியத்துவம் என்னவென்றால், தனி மனித உரிமை என்பதையே முதன்மையாக வலியுறுத்துகிறது. இந்த கருத்தை நான் மதிக்கிறேன். வரவேற்கிறேன். ஆனால், இதனை வாய்மொழியாகவோ, கருத்தாகவோ தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஓரின சேர்க்கையாளர்கள் விருப்பப்படி இருந்து கொள்ளலாம் என்பதை இந்த தீர்ப்பு வலியுறுத்துகிறது. அந்த வலியுறுத்தல் முழுக்க முழுக்க சாதகமாக அமையும் என்று சொல்ல முடியாது,
பாப்பா மோகன் (உச்சநீதிமன்ற வழக்கறிஞர்)
இந்த தீர்ப்பினை நான் வரவேற்கிறேன். இது ஒரு தனிமனித உரிமை. பறவைகள், விலங்குகள் தன் விருப்பப்படியான வாழ்வை தேடி நிம்மதியாக இருக்கின்றன. ஆனால் நமக்கு கலாச்சாரம், பண்பாடு என்று இருக்கிறது. அதை நான் மதிக்கிறேன். அதேபோல தனிமனித உரிமை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சரி, ஒன்றை நான் கேட்கிறேன், இப்போது நாம் கலாச்சாரம், பண்பாடு என்கிறோமே, அதை எல்லோருமே மதிக்கிறார்களா? ஆசிபா என்ற 8 வயது குழந்தையை நாசம் செய்யவில்லையா? கலாச்சாரம் என்று சொல்லிக்கொண்டு செய்யும் அநியாயத்தைவிட இது ஒன்றும் மோசம் இல்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் விருப்பப்பட்டு வாழும் உரிமையை சமூகக் கேடு என்று சொல்ல முடியாது.
சாத்தப்பன் (சேலம் மாவட்ட நீதிபதி-ஓய்வு)
உச்சநீதிமன்ற அமர்வு ஒரு தீர்ப்பை சொல்கிறது என்றால் அது எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சொல்ல மாட்டார்கள். பலகட்ட ஆய்வுகளையும், ஆலோசனைகளையும் நடத்திதான் தீர்ப்பை வழங்கி இருப்பார்கள். அப்படி பார்க்கும்போது, தனிமனித உரிமை என்று வரும்போது நீதிமன்றம் சொன்ன கருத்து உண்மைதான். உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்ப்புதான். அதேசமயம், நம் நாடு என்று பார்த்தால் சில நெறிமுறைகளுக்கு உள்ளாகி உள்ளோம். இதுபோன்ற தீர்ப்பினால் கண்டிப்பாக தவறுகள் நிகழ வாய்ப்பு உள்ளது. ஓரின சேர்க்கை நபர்கள் எந்ததவறில் ஈடுபட்டாலும், இந்த தீர்ப்பினை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வார்கள். அவர்களுக்கு சட்டமே பாதுகாப்பு கொடுப்பது போல. ஓரின சேர்க்கையில் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கின்றனர். பெண்கள் ஓரளவு மென்மை போக்கானவர்கள்தான். ஆனால் ஓரினசேர்க்கையில் ஆண்களின் முரட்டுத்தன்மை அதிகமாக இருப்பதால் தவறுகளும் அதிகமாகவே இருக்கும்.