2 வயசு புயல்.. கமல் சார், உங்க "கட்டிப்பிடி" வைத்தியத்துக்கு தமிழகம் காத்துகிடக்கு.. சீக்கிரம் வாங்க
3-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது மக்கள் நீதி மய்யம்
சென்னை: மக்கள் எதிர்பார்த்து வந்த மாற்றத்தைக் கொடுக்கப் போவது யார் என்ற பெரும் ஏக்கத்துக்கு மத்தியில் வெளிவந்தவர்தான் விஜயகாந்த். ஆனால் காலம் அவரை மாற்றிப் போட்டு விட்டது.. அடுத்து மக்கள் எதிர்பார்ப்பை கிட்டத்தட்ட பூர்த்தி செய்துள்ளவர் யார் என்றால் அது நிச்சயம் கமல்ஹாசன் மட்டுமே.
வானம் பார்த்த பூமியில் திடீரென பெய்யும் மழை போல.. வந்து குளிர்வித்தவர் கமல்ஹாசன். யார் யாரையோ அரசியலுக்கு வருவாரா.. மாற்றம் தருவாரா என்று மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்.. "நான் இருக்கிறேன் நம்மவராக கை கோர்ப்போம்" என்று வந்து குதித்தவர்தான் கமல்ஹாசன்.
சினிமா வாய்ப்புகள் குறைவதாலும், இருக்கும் பாப்புலாரிட்டியை தக்க வைத்து கொள்வதற்காகவும்தான் அரசியலுக்குள் வருகிறார் என்ற பேச்சுதான் பரவலானது.
ஆக்ஷன் ஹீரோவாக மாறி வரும் எடப்பாடியார்.. திமுகவிடம் இன்னும் ஆக்ரோஷம் தேவை.. வாசகர்கள் பளிச் தீர்ப்பு
விமர்சனம்
இன்னும் சில தலைவர்கள், இதுவரைக்கும் சம்பாதித்தது பத்தாமல், இனி அரசியலிலும் சம்பாதிக்க வந்துவிட்டார் என்று பகிரங்கமாகவே விமர்சித்தார்கள். ஆனால், வந்த வேகத்தில் மக்கள் மனதில் படு வேகமாக பதிந்தும் போனார். குறிப்பாக நகர்ப்புற தமிழகம் கமல்ஹாசனின் வருகையால் மெய்யாகவே மனம் சிலிர்த்தது. ஆனால் விட்டாரா கமல்.. கிராமப்புறங்களிலும் படு வேகமாக ஊடுருவினார்.. அதுதான் ரியல் வெற்றி.
அப்துல் கலாம்
கமல்ஹாசன் தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்த நேரத்தில் இரு பெரும் ஆளுமைகளில் ஜெயலலிதா மறைந்திருந்தார். திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவுற்றிருந்தார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் நினைவிடத்திற்குச் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி தனது அரசியல் பாதையில் பயணிக்க ஆரம்பித்தார் கமல்ஹாசன். மதுரையில் நடந்த மிகப் பெரிய விழாவில் அவரது அரசியல் கட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
2 ஆண்டு
கமல்ஹாசனின் இந்த 2 ஆண்டு கால அரசியல் பயணம் என்பது மிக சிறியதுதான். ஆனால் சொல்லிக் கொள்ளும்படியான விஷயங்கள் எக்கச்சக்கமானவை என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. நிறைய ஆக்கப்பூர்வமான போராட்டங்களை மக்கள் நீதி மய்யம் நடத்தியுள்ளது. குறிப்பாக பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூரத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம்தான் ஆரம்பத்தில் போர்க்கோலம் பூண்டது. பிறகுதான் பிற கட்சிகள் வந்து இணைந்தன.
மய்யம்தான்
அதேபோல நீட்டுக்கு எதிராகவும் உரத்துக் குரல் கொடுத்த கட்சி மய்யம்தான். உண்மையிலேயே நிறைய போராட்டங்களையும் முன்னெடுத்தது மய்யம்தான். அதேபோல சமூக நலனில் அக்கறை கொண்ட பல திட்டங்களையும் கூட மய்யம் தொண்டர்கள் முன்னெடுத்து செய்கின்றனர். எப்படி நாம் தமிழர் கட்சியினர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல அருமையான விஷயங்களைச் செய்கிறார்களோ அதேபோல மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் நிறையவே செய்து வருகின்றனர்.
அரசியல் கருவி
மய்யத்தின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று கிராம சபைக்கு உயிர் கொடுத்தது. உண்மையிலேயே கமல்ஹாசனை இதற்காக எத்தனை பாராட்டினாலும் தகும். அதற்கு முன்பு வரை அதை ஒரு அரசியல் கருவியாகவே பலரும் பார்த்து வந்தனர். ஆனால் கமல்தான் கிராமம் கிராமமாக போய் இது உங்கள் சபை. உங்களது குரலை உரத்து சொல்லும் சபை.. உங்களுக்கான உரிமைகளை நிறைவேற்றும் கடமை உள்ள சபை என்பதை மக்களுக்குப் புரிய வைத்தார். சொன்னதோடு நிற்காமல் இவரே பல கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றார்.
லோக்சபா
லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி யாரும் எதிர்பாராத வகையில் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தியது. யாரையெல்லாம் பெரிய கட்சிகள் என்று மக்கள் நினைத்தார்களோ அவர்களுக்கு வெகு அருகே வந்து உட்கார்ந்து விட்டது மய்யம். வெற்றி கிடைக்காமல் போனாலும் கூட பல இடங்களில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக மய்யம் மாறியிருந்தது. இது கமல்ஹான் கட்சியினருக்குக் கிடைத்த பெருமிதங்களில் முக்கியமானது.
சுப்பிரமணியசாமி
என்னதான், பாஜகவுக்கு எதிராகவும், மக்களின் நலனுக்காக ஆதரவாகவும் கருத்துக்களையும் விமர்சனங்களையும் கமல்ஹாசன் வெளிப்படுத்தி வந்தாலும், பாஜகவுக்கு நிழல் ஆதரவாளர் என்பதுபோல ஒருசிலர் இன்னமும் சொல்லி கொண்டுதான் இருக்கிறார்கள். சுப்பிரமணிய சாமி விடாமல் இன்னமும் கமலை திட்டிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால், எப்போ, எதை பேச வேண்டுமோ அதை சரியாகவே பாஜகவுக்கு திருப்பி தந்து கொண்டிருக்கிறார் கமல்.."வெற்று நாயகம்" என்ற வார்த்தையாகட்டும், அல்லது எந்த "ஷா"வும் அதை மாற்றிவிட முடியாது என்று சம்மட்டி அடி பதிலாகட்டும்.. கமலை தவிர வேறு யாருக்கும் இதை சொல்ல துணிச்சல் இல்லை!!
மதிப்பு
அதுமட்டுமல்ல, அடுத்தவர்களிடம் பேரம் பேசும் ஒரு வியாபாரத்தை கமல் கையில் எடுக்கவில்லை. இது அவரது மதிப்பை ஒருபக்கம் உயர்த்தி காட்டினாலும், எந்த ஒரு கட்சியும் ஒரே வருடத்தில் செய்ய துணியாத காரியம் இது. இது எல்லாவற்றிற்கும் மேலாக வரும் தேர்தலில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க கூடிய இடத்தில் கமல் இன்று இருப்பதும், அதை குறுகிய வருடங்களில் செய்து காட்டியதும் வரவேற்கத்தக்கதே.. மெச்சத்தக்கதே.
எதிர்பார்ப்பு
அடுத்து மய்யம் அதகளம் செய்யப் போவது 2021 சட்டசபைத் தேர்தலில்தான். மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் கமல் கட்சியினர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமும் அதற்காக காத்திருக்கிறது. கமல்ஹாசன் மனதில் என்ன உள்ளது.. என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளார்.. எப்படியான அணுகுமுறையை மய்யம் கடைப்பிடிக்கப் போகிறது.. மய்யத்தின் வீச்சு எந்த கோணத்தில், எந்த ரூபத்தில் இருக்கப் போகிறது என பல கேள்விகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் தாண்டி, மக்கள் நினைத்த உண்மையான மாற்றமாக மய்யம் திகழும் என்ற நம்பிக்கையை அக்கட்சியினர் அழுத்தம் திருத்தமாக முன் வைக்கின்றனர்.
ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. இது பிக் பாஸுக்கு மட்டுமல்ல.. நாயகனுக்கும் கூட... மக்கள் போடும் அன்பு கட்டளை இது!