லாரி மீது கார் பயங்கர மோதல்: 4 சாப்ட்வேர் என்ஜினியர்கள் உள்பட 5 பேர் பலி
விழுப்புரம்: விழுப்புரத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த 4 சாப்ட்வேர் என்ஜினியர்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் பிரவீன் குமார் ரெட்டி, ராம் கிஷோர் விட்டல், அலெக்சாண்டர் மற்றும் பிரான்சிஸ் அந்தோணி. அவர்கள் 4 பேரும் வாடகை கார் மூலம் நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு கிளம்பினர். காரை டிராவல் ஏஜென்சியை சேர்ந்த ஆகாஷ் குமார் ஓட்டினார்.
அவர்களின் கார் நேற்று காலை திண்டிவனத்தை அடைந்தது. அவர்கள் புதுவை சென்று அங்கு இரவை கழித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை பயணத்தை தொடர நினைத்தனர். இந்நிலையில் நேற்று காலை 10 மணிக்கு அவர்களின் கார் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் அருகே செல்கையில் தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் ரெட்டி, விட்டல் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். அந்தோணி, ஆகாஷ் மற்றும் லாரியின் கிளீனர் பிரின்ஸ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். புதுவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த 3 பேரில் அந்தோணி மற்றும் பிரின்ஸ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர். ஆகாஷின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கிளீனர் பிரின்ஸ் கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர்.
கார் டிரைவர் ஆகாஷ் தூக்கத்தில் வாகனம் ஓட்டி லாரி நின்றதை கவனிக்காமல் மோதியிருக்க வேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர். இந்நிலையில் போலீசார் ஆகாஷ் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.