ப.சிதம்பரத்திற்கு 2 இடங்களில் கருப்புக் கொடி.. நாலே நாலு பேர் கைது!
ராஜபாளையம்: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இன்று ராஜபாளையம் அருகே நான்கு பேர் கருப்புக் கொடி காட்டிக் கைதானார்கள்.
ராஜபாளையத்தில் ராஜுக்குள் சமுதாயத்திற்குச் சொந்தமான ஆடவர் கல்லூரி உள்ளது. சமீபத்தில் இந்தக் கல்லூரியை இரு பாலினர் கல்லூரியாக மாற்றினர்.
ஆனால் இப்படி மாற்றியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறி அச்சமுதாயத்தைச் சேர்ந்த மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் என்ற அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது. மேலும் ப.சிதம்பரத்தையும் அது விமர்சித்திருந்தது.
இந்த நிலையில் இன்று அக்கல்லூரியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு விழா நடந்தது. அதற்கு ப.சிதம்பரம் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் ப.சிதம்பரத்திற்குக் கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்துவோம் என்று மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத் தலைவர் ராமராஜு அறிவித்திருந்தார்.
இதையடுத்து அவரை இன்று அதிகாலையில் போலீஸார் கைது செய்து கூட்டிச் சென்று விட்டனர். இந்த நிலையில் இன்று ப.சிதம்பரம் ராஜபாளையம் வந்தபோது 2 இடங்களில் அவருக்குக் கருப்புக் கொடி காட்டப்பட்டது. அதுதொடர்பாக நான்கு பேரை போலீஸார் கைது செய்தனர்.