ராஜஸ்தானிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்ட 4 ஒட்டகங்கள்.. தடையை மீறி வெட்டப்படுமா?
சென்னை: பக்ரீத் பண்டிகையன்று ஒட்டகங்களை வெட்டி குர்பானி கொடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும், ராஜஸ்தானிலிருந்து நான்கு ஒட்டகங்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளன. இவை தடையை மீறி வெட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ராஜஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள இந்த நான்கு ஒட்டகங்களும் தண்டையார்ப்பேட்டையில் உள்ள நேதாஜி நகரில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளன. பக்ரீத் அன்று இந்த ஒட்டகங்கள் வெட்டி குர்பானி கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தண்டையார்ப்பேட்டையைச் சேர்ந்த அன்சாரி என்பவர் இந்த ஒட்டகங்களை வாங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்திற்கு 100க்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. நான் இந்த நான்கு ஒட்டகங்களை வாங்கியுள்ளேன்.
சென்னை தவிர மதுரை, திருநெல்வேலி, திருச்சி, தூத்துக்குடி, கோவை, ஈரோடு, சேலம் ஆகிய நகரங்களுக்கும் ஒட்டகங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. மேலும் பல ஒட்டகங்கள் வருகின்றன. ராஜஸ்தானிலிருந்து இவற்றை கால் நடையாகவே கொண்டு வரப்படுகின்றன.
அடுத்த வாரம் நான் மேலும் 4 ஒட்டகங்களை கொண்டு வரவுள்ளேன். அவையும் வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படும். ஆடு, கோழிகளை வெட்ட எந்தத் தடையையும் அரசும், கோர்ட்டும் விதிக்கவில்லை. அதேபோல ஒட்டகத்தை வெட்டவும் தடை நீக்கப்பட வேண்டும் என்றார் அன்சாரி.
இதற்கிடையே, 13ம் தேதி பக்ரீத் பண்டிகையன்று தடையை மீறி ஒட்டகங்களை வெட்டுவோம் என்று இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.