நாய் வாலை வெட்டிய 4 பேர் மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் கைது
சென்னை: வாலை வெட்டினால் நாய் வளரும் என்ற நம்பிக்கையில் நாயின் வாலை வெட்டிய 4 பேர் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, அய்யப்பன்தாங்கல் அருகே கஜலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சோமு, ஹரி, அசோக் குமார் மற்றும் பேச்சிமுத்து என்ற 4 பேர் அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் 4 பேரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்து வளர்த்து வந்துள்ளனர். ஆனால், அந்த நாய் சரியாக வளரவில்லையாம். இது குறித்து தங்களது கவலையை நண்பர்களிடம் கூறி வருத்தப் பட்டுள்ளனர் அவர்கள்.
அதனைத் தொடர்ந்து, நாய் வாலை வெட்டி விட்டால் நாய் நன்றாக வளரும் என அவர்களது நண்பர்கள் அறிவுரைக் கூறியுள்ளனர். அதை அப்படியே நம்பியதன் பேரில், தங்களது நாய்க்குட்டியின் வாலை வெட்டியுள்ளனர் இவர்கள்.
வலி தாங்காமல் அலறித் துடித்த நாயின் அலறலைக் கேட்டு அருகே வசித்து வரும் சாந்தி என்பவர் ப்ளூ க்ராஸ் அமைப்புக்கு போன் செய்து புகார் கொடுத்துள்ளார். சாந்தியின் புகாரை உறுதிச் செய்த ப்ளூகிராஸைச் சேர்ந்த ஜான் வில்லியம் என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அவரது புகாரின் அடிபடையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், நாய்க்குட்டியை மீட்டு சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், நாயின் வாலை வெட்டிய 4 பேரையும் மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பின்னர், நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப் பட்ட அவர்களுக்கு பெயில் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.