திருவண்ணாமலை தீர்த்தவாரியில் 4பேர் பலியான சோகம்: கோவில் இணை ஆணையர் இடமாற்றம்
திருவண்ணாமலை: தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது குளத்தில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் செந்தில்வேலன் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொது மக்கள் மற்றும் நிர்வாக நலன் கருதி செந்தில்வேலன் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் பொறுப்பு விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வாசுநாதனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அர்த்தோய புண்ணியகாலம் எனப்படும் மஹோதய புண்ணியகால விழா இன்று சிறப்பாக நடைபெறுகிறது. கடற்கரை மற்றும் கோயில் குளங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு அனைவரும் தர்ப்பணம் செய்வது வழக்கம்.
தை அமாவாசை தினத்தில், திருவோணம் நட்சத்திரம் மற்றும் சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை ஆகியவை ஒருசேர அமையும் தினம் மஹோதய புண்ணியகாலமாக கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா மகம் போல், 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அமையும், மஹோதய புண்ணிய காலம் என்பது மிகவும் விசேஷமானது.
இதையொட்டி, திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயிலில் அண்ணாமலையாருக்கு இன்று அதிகாலை சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதன் பின்னர் அண்ணாமலையார் கோவிலில் இருந்து சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அய்யங்குளத்தில் எழுந்தருளிய அண்ணாமலையார், சூரிய உதயத்திற்கு முன்பு இந்திர தீர்த்தம் எனப்படும் தீர்த்தவாரி நடந்தது.
அப்போது, பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு நெருக்கம் ஏற்பட்டது. இதில் ஒருவருக்கு ஒருவர் தள்ளிக் கொண்டு தீர்த்தவாரியை காண முண்டியடித்ததில் ஏராளமானோர் குளத்தில் தவறி விழுந்தனர். நீச்சல் தெரிந்தவர்கள் தப்பித்த நிலையில் சிலர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் உடனடியாக குளத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வெங்கடேசன், சிவா, புண்ணியக்கோடி மற்றும் தனியார் பொரியியல் கல்லூரி பேராசிரியர் மணிகண்டன் என்பவர்களது உடல்களை அவர்கள் மீட்டனர். 4 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து பக்தர்கள் நீராட போலீசார் தடை விதித்தனர்.
ஆணையர் இடமாற்றம்
அபூர்வமான மஹோதய தீர்த்தவாரி நிகழ்ச்சியில் புனித நீராட பல ஆயிரக்கணக்கானோர் குளத்தில் குவிவார்கள் என்று தெரிந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் செந்தில்வேலன் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொது மக்கள் மற்றும் நிர்வாக நலன் கருதி செந்தில்வேலன் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை கோயில் இணை ஆணையர் பொறுப்பு விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வாசுநாதனுக்கு அளிக்கப்பட்டுள்ளது.