சீரழியும் சிறார்கள்: வால்பாறை பேருந்து நிலையத்தில் குடிபோதையில் தள்ளாடிய 4 பள்ளி மாணவர்கள்
கோவை: வால்பாறை பேருந்து நிலையத்தில் காலை வேளையில் பள்ளி மாணவர்கள் 4 பேர் குடிபோதையில் தள்ளாடியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பேருந்து நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பள்ளி சீருடையில் 4 மாணவர்கள் வந்தனர். மது அருந்திய அவர்கள் போதையில் நடக்க முடியாமல் தள்ளாடினர்.
அதில் ஒரு மாணவர் நடக்க முடியாமல் கீழே விழுந்துவிட்டார். இதை பார்த்த அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் மாணவர்களின் போதை ஆட்டத்தை தங்களின் செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.
இந்நிலையில் கீழே விழுந்து கிடந்த மாணவரை மற்ற 3 மாணவர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். மாணவர்கள் வால்பாறை தாலுகா அலுவலகம் அருகே உள்ள புதர்மறைவில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
நண்பகல் 12 மணிக்கு தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு எப்படி காலையிலே மது கிடைத்தது என தெரியவில்லை. அவர் முந்தைய நாள் இரவே மது வாங்கி வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடியது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.