3 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த 4 ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்பு
புதுக்கோட்டை: நடுக் கடலில் தத்தளித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். படகு பழுதடைந்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர்களை புதுக்கோட்டை மீனவர்கள் மீட்டு வந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடந்த 8-ந் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் மேகராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் உச்சிப்புளியை சேர்ந்த வேல்முருகன், முனியாண்டி, சுந்தரம், மாரி ஆகிய 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர்.
இந்தநிலையில் அவர்களுடன் சென்ற மீனவர்கள் 9-ந் தேதி மீன்களுடன் ஒருவர் பின் ஒருவராக கரைக்கு திரும்பிய நிலையில், மெகராஜூக்கு சொந்தமான படகில் சென்ற 4 மீனவர்கள் மட்டும் கரை திரும்பவில்லை.
இதனால் பதற்றம் அடைந்த படகின் உரிமையாளர் மெகராஜ், மீன்துறை அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளார். மேற்றொரு படகில் வேறு சில மீனவர்களுடன் மாயமான படகை தேடி சென்றனர். இது தொடர்பாக கடலோர காவல் படை, கப்பற்படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது ராமையா என்பவருக்கு சொந்தமான விசை படகில் சென்ற ராம்திலீப், ராபின் உள்ளிட்டோர் கடலில் மாலை 6 மணி அளவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு உதவிகோரிய நிலையில் ஒரு படகு தத்தளிப்பதை அவர்கள் பார்த்துள்ளனர்.
இதையடுத்து, அருகில் சென்று பார்த்த போது அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள், தங்களின் விசை படகு பழுதாகி கடந்த 3 நாட்களாக கடலில் தத்தளித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜெகதாபட்டினம் மீனவர்கள் தங்கள் விசைப்படகில், பழுதாகியுள்ள அந்த மண்டபம் மீனவர்களின் விசைப்படகை கட்டி இழுத்து வந்தனர். இந்த படகு இன்று அதிகாலை 6 மணிக்கு ஜெகதாப்பட்டினம் துறைமுகத்திற்கு பத்திரமாக வந்து சேர்ந்தது.