வேலூர்: வியாபாரி வீட்டில் ஏ.சி. வெடித்து 4 பேர் உடல் கருகியது
வேலூர்: வேலூர் அருகே வியாபாரி வீட்டில் இருந்த ஏசி வெடித்து தீ பற்றியதில் 4 பேர் உடல் கருகியது.
வேலூர் கஸ்பா அடவந்தல் ஏரிதெருவை சேர்ந்தவர் வாகித்கான் (வயது 50). வேலூரில் பழைய மீன் மார்க்கெட் அருகே டிபன் கடை வைத்துள்ளார். இவரது மனைவி நூர்ஜகான் (45), மகள்கள் -ஷாகிஸ்தா (19), கல்லூரியில் படித்து வருகிறார். ஷாஜியா (11) 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது வீட்டில் ஞாயிறு இரவு வாகித்கான் அவரது மனைவி மகள்கள் வீட்டில் உள்ள அறையில் படித்து உறங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் அந்த அறையில் உள்ள ஏ.சி.இயந்திரத்தில் மின்கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அறை முழுவதும் தீ பற்றி எரிந்தது.
வாகித்கான் அவரது மனைவி நூர்ஜகான் இருவரும் எழுந்திருக்க முடியாதபடி கட்டிலில் தீ பற்றி எரிந்தது. மேலும் அருகில் உள்ள கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீதும் தீ பரவியது. அவர்களது மகள் ஷாகிஸ்தாவும் தீயில் கருகினார். அவரது ஆடையிலும் தீ பற்றியது.
வாகித்கானின் 2-வது மகள் ஷாஜியா உடலில் தீ பற்றியது. சுதாரித்து கொண்ட அவர் கூச்சலிடவே, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த கதவை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்தனர்.
அவர்கள் வாகித்கான், நூர்ஜகான், ஷாகிஸ்தா, ஷாஜியா ஆகியோர் மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தீயணைப்பு வீரர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அறையில் எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர்.
இந்த விபத்தில் அறையில் இருந்த கண்ணாடிகள் நொறுங்கியது. அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. வியாபாரி வீட்டில் ஏ.சி.வெடித்து சிதறி 4 பேர் உடல் கருகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.