வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 4 பேர் பலி - பலர் படுகாயம்
சென்னை வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை: வடபழனியில் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் முதல்தளத்தில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் வரை காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள வடபழனி தெற்கு சிவன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் தீ பற்றியுள்ளது. அந்த தீ அங்கிருந்த வீடுகளுக்கும் பரவியது.
உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர். அதனால் அவர்களை வெளியேற்றும் பணியில் தாமதம் ஏற்பட்டது. அதிகப்படியான புகைமூட்டம் காரணமாக அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி, சஞ்சய், செந்தில், சந்தியா ஆகியோர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 5 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்தில் 20 இருசக்கர வாகனங்கள் கருகின. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 சதவிகிதம் மட்டுமே தீ காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சுதிணறல் காரணமாகவே நால்வரும் உயிரிழந்து விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கீழ் தளத்தில் அச்சகத்தில் மின்கசிவு காரணமாக தீ பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.