அரவக்குறிச்சி அருகே தாறுமாறாக ஓடிய கார்.. புளியமரத்தில் மோதி 2 பெண்கள் உட்பட 4 பேர் பலி
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தில் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
கரூர்: அரவக்குறிச்சி அருகே புளிய மரத்தில் கார் மோதியதில் 2 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கரூர் சின்னதாராபுரத்தில் மரத்தில் கார் மோதியதில் 2 பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், மனைவி ஜெயலட்சுமி, சுப்புலட்சுமி, ஓட்டுநர் உயிரிழந்துள்ளனர்.
கரூரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் ஓய்வுபெற்ற ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆவார். இவர், தனது மனைவி மற்றும் மனைவியின் தங்கையை அழைத்து கொண்டு காரில் தாராபுரம் சென்று கொண்டிருந்தார். காரை முனியாண்டி என்பவர் ஓட்டி வந்தார். சின்னதாராபுரம் என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சாலையில் ஓட ஆரம்பித்தது.
பின்னர் சாலையோரம் இருந்த ஒரு புளியமரத்தில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் கார் முற்றிலும் நொறுங்கியது. மரத்தோடு கார் நொறுங்கியதால், இந்த இடிபாடுகளில் சிக்கி காரினுள் பயணம் செய்த 4 பேருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த சின்னதாராபுரம் போலீசார் இடிபாடுகளிலிருந்து 4 பேரின் உடல்களை மீட்டு கரூர் அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.