புதுக்கோட்டை அருகே வேன் மீது டிராக்டர் மோதி விபத்து: 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கந்தர்வகோட்டையில் வேன் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் தாளப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் கவிதா திருமணத்துக்காக சென்ற உறவினர்கள் அறந்தாங்கியில் இருந்து ஏழுப்பட்டிக்கு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
கந்தர்வர்கோட்டை அருகே புதுநகர் என்ற இடத்திற்கு அருகில் வந்த போது பின்னால் கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் பள்ளி மாணவர்கள் கவியரசு, மகேந்திரன், மற்றும் ராமராசு, மாரிமுத்து, சஞ்ஜெய் உள்பட 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த கந்தர்வர்கோட்டை காவல்துறையினர் உடல்களை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய போது நிகழ்ந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.