தொகுதிப் பங்கீடு- இடதுசாரிகளுடன் அதிமுக குழு முதல் கட்ட பேச்சுவார்த்தை!
சென்னை: லோக்சபா தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களுடன் அதிமுக குழுவினர் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இக்கட்சிகளுக்கு தலா ஒரு இடம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இதனிடையே அதிமுகவிடம் 2 தொகுதிகளை கேட்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் பதற்றத்துடன் திட்டவட்டமாக மறுத்து ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலர் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், தொகுதிப் பங்கீடு பற்றி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர்கள் நத்தம் ரா. விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, ஆர். வைத்திலிங்கம் ஆகியோர் இக்குழுவில் இடம்பெறுவர் என்று கூறியிருந்தார்.
இதன் பின்னர் அதிமுக தலைமை கழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன், சி.மகேந்திரன், பழனிசாமி ஆகியோர் அடங்கிய குழுவினருடன் அதிமுக குழு முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது
இதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், சவுந்திரராஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினருடன் அ.தி.மு.க குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தைகள் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், இந்தியாவுக்கு தமிழகம் தலைமை ஏற்க வேண்டும் என்று ஒற்றைவரி பதிலை சொல்லிவிட்டு கிளம்பினார்.