பல்லடத்தில் பரபரப்பு.. பாய்ந்து பாய்ந்து குதறிக் கடிக்கத் தாவும் குரங்குகள்.. மக்கள் பீதி!
அச்சுறுத்தி வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல்லடம்: மேற்கு பல்லடம் பகுதியில் 4 குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக 4 குரங்குகள் மேற்கு பல்லடம் குடியிருப்பு பகுதிக்குள் முகாமிட்டுள்ளன. அத்துடன் அங்குள்ள பெண்கள், மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது. மேலும் சின்னியகவுண்டன் பாளையத்தை சேர்ந்த காய்கறி வியாபாரம் செய்யும் லட்சுமி என்பவரையும் குரங்குகள் கடித்து குதறியுள்ளன. இதில் அவர் காயமடைந்துள்ளார்.
இதை தவிர வீடுகளுக்குள் 4 குரங்குகளும் ஒன்றாக புகுந்து அங்கிருக்கும் பொருட்களை கடித்து குதறி அழித்து வருகிறது. இதனால் வீட்டிலுள்ள குழந்தைகள் பயத்தில் அலறுகின்றனர். குரங்குகளால் அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் குரங்குகளை விரட்ட சென்றால், குரங்குகள் பொதுமக்களை விரட்டி வருகின்றன. எனவே அச்சுறுத்தி, அட்டகாசம் செய்து வரும் இந்த நான்கு குரங்குகளையும் கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.