ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு
ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 75 நாட்களுக்கு பிறகு அவர் மரணமடைந்தார்.
இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மக்கள் எழுப்பினர். இதையடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இவர் கடந்த ஆண்டு நவம்பரில் விசாரணையை தொடங்கினார்.
முதலில் விசாரணை அறிக்கையை 4 மாதங்களில் தாக்கல் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் இன்னும் சிலரை விசாரிக்க வேண்டியிருப்பதால் மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து ஆறுமுகசாமியின் ஆணையத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது எதிர்தரப்பினர் குறுக்கு விசாரணை செய்து வருவதால் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் வழங்குமாறு ஆணையம் கேட்டுக் கொண்டது.
அதன்படி தமிழக அரசு 4 மாதங்கள் காலநீட்டிப்பு செய்து உத்தரவிட்டது. இது இரண்டாவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.