டெங்கு காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 10 பேர் பலி - கவனிக்கத் தவறிய தமிழக அரசு
தமிழகத்தில் டெங்குவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை: டெங்கு காய்ச்சலுக்கு ஒரே வாரத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்த மரணங்கள் மக்களை பீதிக்கு ஆளாக்கி வருகிறது.
திருவள்ளூர் மணவாள நகரில் டெங்கு காய்ச்சலால் 10 வயது சிறுமி உயிரிழந்தார். சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதீபா இன்று உயிரிழந்தார். மேலும் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர்.
இன்று ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரோடு, அந்தியூரை அடுத்த நாகலூரைச் சேர்ந்த யாழினி,6 கடந்த 15 நாள்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக, சின்னத்தம்பி பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவப் பரிசோதனையில் சிறுமி டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
சேலம் பழைய சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லவன். இவர் சேலம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் ஜெனீபா. இவர்களின் ஒரே மகன் ஜெய்கிருஷ்ணா வயது 12. இவர் சேலம் சிவதாபுரத்தில் உள்ள தனியார்ப் பள்ளியில் 7ஆம் வகுப்புப் படித்து வந்தார். மூன்று நாள்களுக்கு முன்பு, காய்ச்சல் காரணமாக சேலம் ஐந்து ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
காய்ச்சல் குறையாமல் அதிகரித்ததை அடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் உயர் சிசிக்கைக்காக சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் சிகிச்சைப் பலனின்றி இன்று ஜெய்கிருஷ்ணா இறந்துள்ளார்.
இதுபோன்று டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தேனி, தேவதானப்பட்டியைச் சேர்ந்த ராஜஸ்ரீ,7 என்ற சிறுமி உயிரிழந்துள்ளார்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி அமிர்தம் காடு தெருவைச் சேர்ந்த ஜான் கென்னடியின் மகன் ராபின் 15, கடந்த 10 நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சிறுவன் டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட ராபினுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுபோன்று டெங்குவால் நான்கு சிறுவர்கள் உயிரிழந்தது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.