தருமபுரி மருத்துவமனையில் மேலும் 4 குழந்தைகள் உயிரிழப்பு! 3 நாட்களில் 10 குழந்தைகள் பலி!!
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவில், பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், ஒவ்வாமை, மஞ்சள் காமாலை, குறை பிரசவம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சிகிச்சைப் பிரிவில் வெவ்வேறு நாள்களில் அனுமதிக்கப்பட்ட 6 பச்சிளம் குழந்தைகள் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை வரை அடுத்தடுத்து உயிரிழந்தன. இதனால் பெற்றோர், பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த மருத்துவமனை நிர்வாகம், 3 குழந்தைகள் எடைக் குறைவு காரணமாகவும், 2 குழந்தைகள் மூச்சுத் திணறல் காரணமாகவும் இறந்தன. அரசு மருத்துவமனைக்கு வரும் பச்சிளம் குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, இறப்புக்கு காரணம் மருத்துவக் குறைபாடு அல்ல என்று தெரிவித்தது.
இதனிடையே குழந்தைகள் இறப்பு தொடர்பாக சென்னை குழந்தைகள் நல மைய மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.சீனிவாசன் நேற்று தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆய்வு நடத்தினார்.
இந்த மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் மொத்தம் 80 பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று மேலும் 4 குழந்தைகள் உயிரிழந்திருப்பது பெற்றோரை பீதிக்குள்ளாக்கியுள்ளது.
குழந்தைகளின் உடல்நலனை மருத்துவர்கள் குறை கூறினாலும் தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாததே குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.