ஒரே பைக்கில் சவாரி.. வேகமாக வந்து மோதிய ஆம்னி.. 4 பேர் பரிதாப மரணம்
ஆம்னி பஸ் பைக் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video
மணப்பாறை: நள்ளிரவு.. ஹைவே ரோடு... மின்னல் என பறந்த ஆம்னி பஸ் ஒன்று, எதிரே வந்த பைக் மீது மோதியதில் 4 பேர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த பயங்கரம் அனைவரையும் நிலைகுலைய செய்துள்ளது.
மணப்பாறை அருகே உள்ள இரட்டியப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் விமல்ராஜ் 24, அருண்பிரசாத் 23, குணசேகரன் 18, மற்றும் ராஜசேகர் 21. இதில் குணசேகரனும், ராஜசேகரும் சகோதர்கள் ஆவர்.
மின்னல் வேக ஆம்னி பஸ்
இவர்கள் 4 பேரும் நேற்றிரவு ஒரே பைக்கில் லஞ்சமேடு என்ற இடத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வந்தனர். சாப்பிட்டு முடித்தபின்பு அங்கிருந்து திரும்பவும் ஒரே பைக்கில் புறப்பட்டனர். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சுமார் 120 கி.மீ. வேகத்தில், மதுரையில் இருந்து வேலூர் நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்பாராதவிதமாக மின்னல் வேகத்தில் வந்த ஆம்னி பஸ், பைக் மீது பலமாக மோதியது.
குப்பென பற்றிய தீ
மோதிய வேகத்தில் பைக் 4 பேருடன் ஆம்னி பஸ்சுக்கு அடியில் வசமாக சிக்கி கொண்டது. சிக்கியதுடன், தரதரவென நடுரோட்டிலேயே 4 பேரையும் இழுத்து சென்றது. இப்படியே 200 மீட்டர் தூரத்துக்கு பைக் இழுத்து செல்லப்பட்டது. இடித்த வேகத்தில் வண்டியிலிருந்த பெட்ரோல் கசிந்து கொட்ட தொடங்கியது. இதில் சாலையிலும் பைக் இழுத்து சென்ற உராய்வினில் பைக் 'குப்'பென்று தீப்பற்றி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறி எரிய தொடங்கியது.
கதறி அழுதனர்
இதில் 4 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, ஆம்னி பஸ் டிரைவர் ஆனந்தனை கைது செய்தனர். உயிரிழந்தவர்கள் அருண்குமார் கல்லூரியில் படித்து வரும் மாணவர் என்றும் மற்ற 3 பேரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் என்றும் விசாரணையில் தெரியவந்தது. 4 பேரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர்களது உடல்களை பார்த்து அவர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதது அனைவரையும் கண் கலங்க செய்தது.
ஒரே பைக்கில் 4 பேரா?
தமிழகத்தில் சாலைவிபத்து குறித்து பலமுறை, பல வகைகளில் விழிப்புணர்வு சமாச்சாரங்கள் வழங்கப்பட்டுதான் வருகிறது. இப்படி நடக்க கூடாத எதுவும் நடந்துவிடக்கூடாது என்றுதான் பைக்கில் பின்னால் உட்காருபவர்களும் ஹெல்மெட் போட வேண்டும் என்று உத்தரவு போடப்பட்டுள்ளது. 4 பேர் சேர்ந்து ஒரு பைக்கில் போனதே தவறுதானே?