திருவாடானை அருகே வேன்-லாரி மோதி பயங்கர விபத்து: 4 பேர் பலி.. 13 பேர் படுகாயம்
வேனும், லாரியும் மோதி கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
திருவாடானை: திருவாடானை அருகே வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 13 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டின கிராமத்தை சேர்ந்த 3 மீனவ குடும்பங்கள் வேளாங்கண்ணிக்கு செல்ல திட்டமிட்டனர். அதன்படி இன்று காலை ஒரு வேனில் மொத்தம் 17 பேர் வேளாங்கண்ணிக்கு பயணம் செய்து கொண்டிருந்தனர்.
காலை 8 மணியளவில் திருவாடானை அருகே உள்ள நாகனேந்தல் பிரதான சாலையில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த மணல் லாரி எதிர்பாராதவிதமாக வேன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. வேனும்-லாரியும் நேருக்குநேர் மோதிக் கொண்ட இந்த விபத்தினால், வேனில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். 5 சிறுவர், சிறுமிகள் உள்பட 13 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த திருப்பாலைக்குடி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 13 பேரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.