சூலூரில் தொடர் கொள்ளையர்கள் 4 பேர் அதிரடி கைது.. 27 சவரன் நகை, ரூ.11 லட்சம் பொருட்கள் பறிமுதல்
தொடர் கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூலூர்: நீதிபதியின் மனைவி உள்ளிட்ட பல்வேறு நபர்களிடம் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 27 பவுன் நகைகள் மற்றும் 11 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
கோவை மாவட்டம் சூலூரில் கடந்த சில மாதங்களாக செயின்பறிப்பு, வீட்டை உடைத்து கொள்ளை, செல்போன் பறிப்பு என தொடர் சம்பவங்கள் நடந்து வந்தன. இதன் உச்சகட்டமாக கடந்த வாரம் சூலூர் உரிமையியல் நீதிமன்ற நீதிபதியின் மனைவியிடம் 9 பவுன் செயினை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். இந்நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இதன்பலனாக இன்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பூரை சேர்ந்த செல்வம், நாகேந்திரன், திருவாரூரை சேர்ந்த ரமேஷ், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வெள்ளிங்கிரி ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் மேற்படி குற்ற செயல்களில் ஈடுபட்டதை ஒத்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து 27 பவுன் நகைகள் மற்றும் லேப்டாப், செல், ஹோம் தியேட்டர் உள்ளிட்ட 11 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து நால்வரையும் போலீசார் கோவை மத்திய சிறையிலடைத்தனர்.