நெல்லை வனப்பகுதியில் சந்தனமரங்கள் வெட்டிக் கடத்தல்: கேரளாவில் 4 பேர் கைது
திருவனந்தபுரம்: தமிழக வனப்பகுதியில் சந்தமரங்களை வெட்டி கடத்திய 4பேர் கொண்ட கும்பலை கேரளா போலீசார் கைது செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய அவர்களை விசாரித்த போது சந்தனம் மரங்களை கடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.
கேரளமாநிலம் திருவனந்தபுரத்தில் கடந்த இருதினங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து சென்ற ஒரு கார் விபத்திற்குள்ளானது. அந்த காரில் இருந்தவர்கள் சுரேஷ் பாபு,சுரேந்திரன்,நவ்சாத்,பகவான் காணி ஆகிய 4பேர்களை பிடித்து விசாரணை நடத்திய பாலக்கோடு போலீசார் காரில் சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது காரில் சாக்கு மூட்டைகளில் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு பேக் செய்யப்பட்ட சந்தன மரக்கட்டைகள் இருப்பதைப் பார்த்த போலீசார் பிடிபட்ட நால்வரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சந்தன மரங்கள் நெல்லை மாவட்டம் முண்டன் துறை வனப்பகுதியிலும்,தமிழக கேரள எல்லையான ஆரியங்காவு கடலாம் பாறை சந்தனத் தோட்டத்திலும்,இந்த கும்பல் சந்தன மரங்களை வெட்டி காடு வழியாகவே கடத்தி பின்னர் கார் மூலம் திருவனந்தபுரத்திற்கு கடத்தியதும்,கார் விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது.
நான்கு பேரையும் திருவனந்தபுரம் போலீசார் கைது செய்து புனலூர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதனைத்தொடர்ந்து வனத்துறை அதிகாரிகள் 4பேரையும் இன்று ஆரியங்காவு வனப்பகுதிக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் கேரளா பகுதியில் குறைவாகவும்,தமிழக பகுதியில் சில மரங்களை வெட்டி கடத்தியதாக இந்த கும்பல் தெரிவித்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
அதிக பாதுகாப்பு கொண்ட தடை செய்யப்பட்ட முண்டன் துறை புலிகள் சரணாலயமாக விளங்குகிறது. இந்த காட்டுக்குள் எப்படி இந்த கும்பல் நுழைந்து சந்தன மரங்களை வெட்டி வனம் வழியாகவே கேரளாவுக்குள் கடத்தினர் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.