புத்தியை தீட்டாமல் கத்தியுடன் திரிந்த சென்னை கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது
சென்னை மின்சார ரயிலில் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களுடன் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்த 4 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
Recommended Video
சென்னை: சென்னை மின்சார ரயிலில் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 4 மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.
நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் சென்னை கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் பயணிப்பது போன்ற வீடியோ ஒரு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன் ரயில் மீது ஏறுவது போன்ற வீடியோவும், ரயில் நிலையத்தில் மாணவர்கள் பட்டாசுகளையும் வெடித்து அட்ராசிட்டியில் ஈடுபட்டதும் போன்ற மற்றொரு வீடியோவும் வெளியானது.
பயணிகளை அச்சுறுத்தும் வகையிலான இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது தொடர்பாக ஊடகங்களும் செய்தி வெளியிட்டன.
மாணவர்கள் கலாட்டா
மாணவர்களின் இதுபோன்ற செயலால் அச்சம் அடைந்த அங்கிருந்த மக்கள் கூறுகையில், மாணவர்கள் மதுபோதையில் இருந்தனர். அவர்கள் கத்தியை காட்டி பயணிகளை மிரட்டியதும் எங்களுக்கு அச்சம் ஏற்பட்டது.
நல்ல வேளை
குடிபோதையில் இருந்ததாலும், ஆயுதங்களை வைத்திருந்ததாலும் ஏதேனும் விபரீதம் நடைபெற்றிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை.
பெற்றோருக்கு மன உளைச்சல்
படிக்கும் வயதில் இதுபோன்று மாணவர்கள் பொறுப்பற்று நடந்து கொண்டதால் பெற்றோருக்கு தேவையற்ற மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இவர்களை போலீஸார் நல்வழிப்படுத்த வேண்டும் என்றனர்.
4 பேர் கைது
இதனிடையே வீடியோவில் அடையாளம் தெரிந்த 4 மாணவர்களை பட்டாபிராம் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் சென்னை மாநிலக்கல்லூரி, புதுக்கல்லூரி, தியாகராயாக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் என தெரியவந்துள்ளது. இவர்களிடம் போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
யார் இவர்கள்
விசாரணையில் திருநின்றவூரைச் சேர்ந்த தண்டாயுதபாணி, பாலமுரளிகிருஷ்ணன், ஜெகதீஸ்வரன், திருவள்ளூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் உள்ளிட்டோரா ஆவர். இவர்கள் 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.