என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. கணவன் - மனைவியை சேர்த்து வைக்க ரூ. 4000 லஞ்சம்.. பெண் அதிகாரி கைது!
கணவருடன் சேர்த்து வைக்க பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது செய்யப்பட்டார்.
Recommended Video
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய, மாவட்ட குடும்ப வன்முறை தடுப்பு சட்ட அலுவலர் கவிதாவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி அடுத்த தேவிரஹள்ளி பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்பவர், தனது கணவருடன் சேர்த்து வைக்ககோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இயங்கும் குடும்ப வன்முறை தடுப்பு சட்ட அலுவலர் கவிதாவிடம் மனு கொடுத்துள்ளார்.
மனுவினை வாங்கி விசாரித்த கவிதா, கணவனுடன் பேசி சேர்த்து வைக்க ரூ.4 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க வேண்டு என்று தனலட்சுமிடம் வற்புறுத்தியுள்ளார். இதற்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத தனலட்சுமி, மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பின்னர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கொடுத்த ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கெண்ட தனலட்சுமி, அதை குடும்ப வன்முறை அலுவலர் கவிதாவிடம் கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலிசார், கவிதாவை கையும் களவுமாக கைது செய்து அவரிடம் இருந்த ரசாயன பவுடர் கலந்த ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
கணவருடன் தன்னை சேர்த்து வைக்க ரூபாய் நான்காயிரம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி, லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..